பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பஸ்களை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மிகவும் இரகசியமான முறையில் விற்று, அப்பணத்தைத் தன்னுடைய சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 2008ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே, இந்திய அரசாங்கத்தினால் 40 பஸ்கள் வழங்கப்பட்டன. இவை, இந்திய ரூபாயில் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியானவையாகும்.
இந்த பஸ்கள் யாவும், அன்னை கோதை என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் பெயரிலேயே பதியப்பட்டுள்ளன.
இந்த நிறுவனம், சௌமியமூர்த்தி தொண்டமானின் பாரியாரின் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக ஆறுமுகன் தொண்டமான் எம்.பி.யின் மகளான கோதை நாச்சியார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கத்தின் மகளான வாணி சிவலிங்கம் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்தும் வகையில் இந்த பஸ்கள் கையளிக்கப்பட்டிருந்த போதிலும் அவை, அம்மக்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை. அவையாவும், குடும்ப உறவினர்கள் பயணம் செய்வதற்கும், சுற்றுலா செய்வதற்கும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் மற்றும் கட்சி உறுப்பினர்களின் மரண வீடுகளுக்கு செல்வதற்காகவுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 40 பஸ்கள் தொடர்பில், இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடமோ அல்லது அந்த நிறுவனத்திடமோ இல்லை என்று வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments