சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் என்ற அமைப்பினர் வில்பத்து சரணாலய வனம் வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றத்திற்காக அமைச்சர் ரிஷாதினால் ஆக்கிரமிக்கப்படுவதாக ஜனாதிபதி அவர்களிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
முறையாக ஆவணப்படுத்தப் பட்ட மறுப்பு அறிக்கையை அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை. அமைச்சர் ரிஷாத் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற நியாயங்கள் இது வரை தேசிய ஊடகங்களில் தர்க்க ரீதியாக முனவைக்கப்படவுமில்லை.
குறித்த விவகாரம் தற்பொழுது நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லப்பட்டும் உள்ளது.
முஸ்லிம்கள் பலவந்தமாக வடபுலத்தில் இருந்து விரட்டியடிக்கப் பட்டபின்னர் அவர்கள் விட்டுவந்த இடங்கள் இராணுவத்தினராலும் தமிழ் மக்களினாலும் ஆகிரமிக்கப்பட்டுள்ளதொடு வில்பத்து வனப்பகுதியிற்கு அருகில் உள்ள பிரதேசங்கள் 2009 - 2012 காலப் பகுதியில் வனப்பிரதேசங்களாக வர்த்தமானி மூலம் பிரகடனப் படுத்தப் பட்டுமுள்ளன.
கடந்த அரசாங்க காலத்தில் இராணுவத்தின் தேவைக்காக வில்பத்து வனாந்தரப் பகுதியில் அமைக்கப்பட்ட பாதை மற்றும்அரசின் ஒத்துழைப்புடன் அரசியல்செல்வாக்குடையோர் ஆக்கிரமித்துக்கொண்டபிரதேசங்கள் என்பனவும் முஸ்லிம்களது மீள் குடியேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வன அழிப்பாக சுற்றாடல் நீதிக்கான அமைப்பினரால் சுட்டிக்கட்டப்படுகின்றது.
உண்மையில் முஸ்லிம்களுக்கு உரித்தான வடபுல காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதில் உள்ளசட்டசிக்கல்களை தவிர்க்குமுகமாக அமைச்சர் ரவூப் ஹகீம் நீதி அமைச்சராக இருந்த பொழுது முன்வைத்த சட்ட மூலம் ஒன்றிற்கான அங்கீகாரம் தற்பொழுது கிடைத்துள்ளது.
அரசியல் ரீதியாக அரச உயர் மட்டத்தினருடனும், உத்தியோக பூர்வமாக அரசயந்திரத்துடனும், சட்ட ரீதியாக நீதி மற்றும் சட்டத் துறையுடனும்...
நிதானமாக மேற்படிவிவகாரத்தை கையாள்வதை விடுத்து இனவாத சக்திகளுடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவது ஆரோக்கியமான நகர்வாக இருக்கும் என்று நான் கருதவில்லை.
இனவாத சக்திகள் முன்பொரு பொழுதும் இல்லாத அளவு உள்நாட்டு பிற நாட்டு ஆதரவுத் தளங்களில் தம்மை நிறுவனமயப்படுத்தி வருகின்ற நிலைமையில் நாம் மிகவும் சாணக்கியமாக அரசியல் இராஜ தந்திர நகர்வுகளில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
வில்பத்து பிரதேசத்தில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் போன்று வட கிழக்கு எங்கும் முஸ்லிம்களுக்கு உரித்தான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் குறித்த விவகாரங்களும் கிடப்பில் இருப்பதனை நமதுதலைமைகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
வட புல முஸ்லிம்களின் அரசியல் அதிகாரமிக்க பிரதிநிதி என்ற வகையிலும், அவர்களது வாக்கு வங்கியில் தங்கி இருப்பவர் என்ற வகையிலும், தமிழ் சிங்கள பேரினவாத தரப்புக்களிடமிருந்து அமைச்சர் ரிஷாத் எதிர்கொள்கின்ற சவால்கள் அதிகமாக இருக்கின்றமையை எவரும் மறுப்பதற்கில்லை.
அதேவேளை கால் நூற்றாண்டு கடந்தும், முஸ்லிம்களது அரசியல் தலைமைகளாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வோர் வடபுல முஸ்லிம்கள் விவகாரத்தில் போதிய கரிசனை காட்டுவதாகவும் தெரியவில்லை.
இவற்றிற்கெல்லாம் அப்பால் ஒருமுகப்படுத்தப் பட்ட சிவில் சமூக செயற்பாடுகளும் எமது அரசியல் தலைமைகளை சரியான திசையில் நகர்த்துவதாகவும் தெரியவில்லை.
-Inamullah Masihudeen-
0 Comments