Subscribe Us

நிவாரண பொருட்களை பறித்து ஜெயலலிதா ஸ்டிக்கர்… ஆளுங்கட்சியினரின் அராஜகம்!

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தமிழகத் தலைநகர் இத்தகைய இடர்பாட்டினை எதிர்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல்விட்ட அரசு, நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி, நாங்கள்தான் விநியோகிப்போம் என்று பல பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இன்னும் சில இடங்களில் அப்படி அபகரிக்கப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் வழங்குவதுபோல் இருக்க வேண்டும் என்று, அதற்காக முதல்வரின் படம் போட்ட ‘ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்குதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.

இன்னும் சில இடங்களில் ‘ஸ்டிக்கர்களை’ தயார் செய்ய தாமதமானதால், அந்த உணவு பொருட்களை வழங்காமல் வைத்திருந்து ஸ்டிக்கர்கள் கிடைக்கப்பெற்ற பின் அதனை நிவாரண பொருட்கள் மீது ஒட்டி அரசு சார்பில் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாமல், மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் ஆளுங்கட்டியினர் பாகுபலி திரைப்பட போஸ்டர்போல் முதல்வரின் படத்தை போட்டு பெரிய பெரிய அளவில் ஃப்ளக்ஸ் பேனர்களை வைத்து கொண்டு மலிவான விளம்பரங்களை தேடிக்கொண்டு நிவாரணம் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்களை, அதிலும் அடுத்தவர்கள் கொடுக்கும் பொருட்களை பெற்று வழங்கி, இதிலும் மலிவான அரசியல் ஆதாயம் தேடும் ஆளும் கட்சியினரை பார்த்து பல இடங்களில் மக்கள் கோபத்தில் குமுற ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களை அ.தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நிவாரணம் வழங்குவதில் அ.தி.மு.க.வினர் செய்து வரும் அராஜகத்தினை மே 17 இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது, இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ”அ.தி.மு.க.வினரின் அராஜகத்தினை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.

நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த மே 17 இயக்கத் தோழர்களிடத்திலும் அ.தி.மு.க.வினர் நெருக்கடியை கொடுத்தனர். தங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைக்கும்படியும், இப்பகுதி எங்களுடையது, எங்களிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று மிரட்டினர். அந்த மக்களிடம் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மே 17 தோழர்கள் நிவாரணப்பணி செய்கின்ற காரணத்தினால் அப்பகுதி மக்களே அ,தி.மு.க.வினருக்கு எதிர்ப்பினை தெரிவித்து தோழர்களுக்கு பாதுகாப்பளித்தனர்.

வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது, ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர், அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாகவும், பல தோழர்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள்.

இதேபோல் ஒரு தனியார் நிறுவனத்தினரால் எடுத்து வரப்பட்ட 5 லாரிகளை இவ்வாறு தடுத்த காரணத்தினால் அந்த வாகனங்கள் சேலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.இதேபோல இஸ்லாமிய இயக்கத் தோழர்களின் வாகனத்திலும் அ.தி.மு.க.வின் கொடியும், ஜெயலலிதாவின் படமும் வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் செயலற்ற, பொறுப்பற்ற தன்மையால் சென்னை நகரம் சீரழிக்கப்பட்டு இன்று சந்திக்கும் பேரிடருக்கு அடித்தளமிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் இந்த நெருக்கடியான நேரத்தில் கூட மக்கள் பணிக்கு இடையூறாக இருக்கும் அ.தி.மு.க.வினரை கண்டிக்க அனைத்து ஜனநாயக இயக்கத் தோழர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது

அதோடு மே17 இயக்கம், உதவி தேவைப்பட்டாலோ, பங்களிப்பு செய்ய விரும்பினாலோ 9444146806, 9884072010, 9962670409 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், முகநூலிலும் செய்தி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வெள்ள எச்சரிக்கை விடுத்த அதிகாரி இடமாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்பிங்களேவை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், சென்னை மிகப் பெரும் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கிறது என்று ஏற்கனவே கணித்து எச்சரிக்கை விடுத்த, ஐஏஎஸ் அதிகாரி விஜய் பிங்ளே இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்? என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கிறது. ஆனால் பிங்ளேவின் இடமாற்றத்துக்கு பின்னணியில் மிகப் பெரிய அரசியல் இருக்கிறது.

கடந்த 2004 -ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்பிங்களே, மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவிட்டு சென்னை மாநகராட்சியில் சாலை தர கட்டுப்பாட்டு பிரிவில், இணை கமிஷனராக பணியாற்றினார். இவர் சென்னை மாநகராட்சியில் பணியாற்றியது வெறும் 16 மாதங்கள் மட்டும்தான். அதற்குள், கொள்ளையடிக்கும் காண்டிராக்டர்களை எல்லாம் கண்டுபிடித்த பிங்ளே, அவர்களை களை எடுக்கத் தொடங்கினார்,

சென்னையில் தரமற்ற சாலைகளை போட்டதற்காக, விஜய் பிங்ளே 9 காண்டிராக்டர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவித்து அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. அதோடு சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் வெளியேற முடியாத சூழல் இருப்பதாகவும், பெரு மழை பெய்தால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கும் என்றும் ஏற்கனவே பிங்ளே எச்சரித்திருந்தார். ஆனால் அவரது எச்சரிக்கையை அரசும், மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை.

அதோடு காண்ட்ரக்டர்களுக்கும் பிங்களே தொல்லையாக இருந்ததால், அவரை இடமாற்றம் செய்யவும் காண்டிராக்டர்கள் லாபியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மழை தொடங்குவதற்கு முன், நடந்த ஆய்வு கூட்டம் ஒன்றில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையிலேயே பிங்களேவின் தடாலடி குறித்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 வாரங்களுக்கு முன் பிங்ளே இடமாற்றம் செய்யப்பட்டார்.

விஜய் பிங்ளே நேர்மையான அதிகாரி. ஆனால் அவருக்கு நெளிவு சுழிவு தெரியவில்லை என்று அவருடன் பணியாற்றுய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments