பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நாமல் ராஜபக்ஷ எம்.பி. உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட சர்ச்சையினால் சபை போர்க்களமாகியதுடன் மஹிந்த ஆதரவு அணியினருக்கும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியினருக்குமிடையில் கைகலப்பு நிலைமை ஏற்பட்டது. அத்துடன் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தவும் முயற்சிக்கப்பட்டது.
மஹிந்த ஆதரவு அணியின் சனத் நிஷாந்த, இந்திக்க அனுருத்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட எம்.பி.க்கள் தாக்குவதற்கு முயற்சித்தனர் அத்துடன் "பாராளுமன்றத்துக்கு வெ ளியில் வா பார்த்துக் கொள்கிறேன்" என்று ஜோன்ஸ் டன் பெர்னாண்டோ எம்.பி. முஜிபுர் ரஹ்மானைப் பார்த்துக் கூறினார்.
முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யை சுற்றி வளைத்துக் கொண்ட மஹிந்த ஆதரவு அணியினர் அவரைக் கண்டபடி திட்டித்தீர்த்தனர். அத்துடன் உங்களை தலைமை ஆசனத்தில் அமர்வதற்கு அனுமதியளிக்கமாட்டேன் என்று முஜிபுர் ரஹ்மானைப் பார்த்து சத்தமிட்ட சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன முஜிபுர் ரஹ்மானின் முகத்துக்கு
முன்பாக கையை நீட்டி நெருங்கிச் சென்று கூச்சலிட்டார்.
முஜிபுர் ரஹ்மானை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மேற்படி எம்.பி.க்களுடன் கெஹலிய ரம்புக்வெல, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, செஹான் சேமசிங்க உள்ளிட்டோரும் இணைந்து கொண்டனர்.
இவ்வாறு நேற்யைய தினம் மாலை வேளையில் பாராளுமன்றம் யுத்த களமாக மாறியமையினால் அமர்வுகள் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. மாலை 04.05 மணியளவில் முதலாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் பின்னர் மஹிந்த ஆதரவு அணியினர் சபை நடுவே கூடி சபாநாயகருக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொண்டனர். அத்துடன் சபை நடுவே அமைச்சர் நவின் திஸாநாயக்கவும், மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குமிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் மூண்டது. இதன்போதே மாலை 04.45 மணியளவில் பாராளுமன்றம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று வெ ள்ளிக்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சின் மீதான குழு நிலைவிவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நாமல் ராஜபக்ஷ எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்தார்.
நாமல்
இதன்போது உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் விசாரணை அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் திட்டமிடப்பட்ட இனப் படுகொலைகள் இடம்பெற்றிருப்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அமைச்சரவைக்கு அறிவித்தீர்களா உங்களது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்ளுக்கேனும் கூறினீர்களா என்று வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை அமைச்சர் மங்கள சமரவீரவும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
முஜிபுர் தலையீடு
இதன்போது ஒரு கட்டத்தில் சபையில் எழுந்திருந்த கூச்சலுக்கு மத்தியில் தாஜிதீனின் படுகொலையும் திட்டமிடப்பட்டதுதான் என்று முஜிபுர் ரஹ்மான் கூறினார். இதன்போது சபையில் மேலும் கூச்சல் எழுந்தது. இதே நிலையில் நாமல் எம்.பி.யின் உரை நிறைவுக்கு வந்தது.
கலவரம்
இதனையடுத்து உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டார். இதன்போது உரையாற்றுவதற்கு எழுந்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி., இங்கு திட்டமிடப்பட்ட படுகொலை தொடர்பில் பேசுகின்றனர். ரகர் வீரர் தாஜிதீன் படுகொலை செய்யப்பட்டதும் இவ்வாறுதான். தாஜிதீனைக் கொன்று அழித்தவர்களே இங்கு வந்து படுகொலை எனப் பேசுகின்றனர் என்றார். இதன்போது மஹிந்த அணியினர் குழுப்பம் விளைவித்தனர். அத்துடன் சனத் நிஷாந்த இந்திக்க அனுருத்த மற்றும் ஜோன்சன்ட் பெர்னாண்டோ ஆகியோர் முஜிபுர் ரஹ்மானை சுற்றிவளைத்து தாக்குவதற்கு முற்பட்டனர். இவர்களுடன் கெஹலிய ரம்புக்வெல, சி.பி. ரத்ணாயக்க, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே உள்ளிட்ட பலரும் சுற்றிவளைத்தனர்.
எனினும் ஆளும் கட்சி எம்.பி.க்களான நவவி உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் முஜிபுர் ரஹ்மானைத் தாக்கவிடாது பாதுகாத்தனர். இதன் பின்னரே படைக்கள சேவிதர்கள் சபைக்குள் ஓடி வந்தனர். அத்துடன் சபை உதவியாளர்களும் இடையிடையே நின்று கொண்டிருந்தனர்.
செஹான் சேமசிங்க
இதன்போது ஒழுக்கப் பிரச்சினையொன்றை எழுப்பிய மஹிந்த ஆதரவு அணி செஹான் சேமசிங்க உறுப்பினர் (முஜிபுர் ரஹ்மான்) முன்வைத்த விடயமானது நீதிமன்றத்தின் விசாரணையிலுள்ள விடயமாகும். எனவே அக்கூற்று வாபஸ் பெறப்பட வேண்டும் என்றார்.
சுஜீவ
இதனையடுத்து ஒழுக்கப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய சுஜீவ சேனசிங்க எம்.பி. குறித்த விடயம் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றபோதும் சம்பவம் தொடர்பாக பிரஸ்தாபித்து உரையாற்றுவதற்கு தடையில்லை என்று வலியுறுத்தினார்.
இதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த அதேவேளை முஜிபுர் ரஹ்மானை சூழ்ந்து தாக்குவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் முஜிபுர் ரஹ்மானிடம் வாக்குவாதப்பட்டதுடன் மல்லுக்கட்டி தாக்குதவற்கு முற்பட்டனர். இதனால் பாராளுமன்றம் நேற்று மாலை 4.00 மணியளவில் யுத்த தளமாக காட்சியளித்தது. இரு தரப்பிலிருந்தும் கடும் வாய்த்தர்க்கங்கள் எழுந்திருந்தன.
முதலாவது தடவை சபை ஒத்திவைப்பு
சபையின் நிலைவரத்தைக் கட்டுபடுத்துவதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்ட சபைக்குத் தலைமை தாங்கிய எட்வர்ட் குணசேகர எம்.பி. 4.05 மணியளவில் சபையை ஒத்திவைப்பதாக கூறி ஆசனத்திலிருந்து எழுந்து சென்றார்.
சபை ஒத்திவைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சற்று அமைதியானது
இதனையடுத்து சபை மீண்டும் 4.20 மணியளவில் கூடியது. இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை ஆசனத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
தினேஷ்
சபை கூடியதும் தினேஷ் குணவர்தன எம்.பி. எழுந்துநின்று ஒழுக்கப்பிரச்சினை ஒன்றை எழுப்பினார். எனினும் ஒழுக்கப் பிரச்சினைக்கு மறுப்புத் தெரிவித்த சபாநாயகர் முதலில் எனது அறிவித்தலுக்கு செவி மடுங்கள் பிறகு ஒழுக்கப் பிரச்சினைப்பற்றி பார்க்க முடியும் என்றார்.
இதனையடுத்து அறிவித்தல் விடுத்த சபாநயாகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சபையின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். அதனைவிடுத்து பாராளுமன்றததை பிரதேச சபை போன்று பயன்படுத்த முடியாது அவ்வாறு செயற்படவும் வேண்டாம் என்றார்.
தினேஷ்
இதேவேளை ஓழுக்கப் பிரச்சினையை எழுப்பிய தினேஷ் குணவர்தன எம்.பி. முஜிபுர் ரஹ்மானால் கூறப்பட்ட விடயமானது தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. எனவே அதே நேரடி ஒளிபரப்பினூடாக அவர் கூறிய அதேவிடயம் அவரால் வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது மஹிந்த ஆதரவு அணியின் அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்று கோஷம் எழுப்பி கூச்சலிட்டனர். அத்துடன் மீண்டும் தினேஷ் எம்.பி ஒழுக்கப் பிரச்சினையை எழுப்பிய போதும் சபாநாயகர் அதற்கு இணங்கவில்லை.
அத்துடன் முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யை பேசுவதற்கு அனுமதித்தார்
முஜிபுர்
இதனையடுத்து பேசிய முஜிபுர் ரஹ்மான் எம்.பி . கூறுகையில் இங்கு பலத்திட்டமிடப்பட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் லசந்த விக்கிரமதுங்க, பிரகித் எக்னெலிகொட ஆகியோரும் கூட இவ்வாறு திட்டமிடப்பட்ட வகையில் படுகொலை செய்யப்பட்டுள்னர்.
இதேவேளை தாஜிதீனின் கொலையும் திட்டமிடப்பட்டது என்றே கூறினேன்.
இதன்போது சனத் நிஷாந்த இந்திக்க அனுருத்த மற்றும் ஜோன்சன் பெர்னாண்டோ ஆகியோர் என்னைத் தாக்குவதற்க்கு முயற்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினரான என்னை இந்த சபையில் இரு முறை தாக்குவதற்கு முயற்சிக்கப்பட்டது.
இதேவேளை பாராளுமன்றத்திற்கு வெ ளியே வா பார்த்துக் கொள்கிறேன் என்றும் தாக்குதல் நடத்துவாதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி. அச்சுறுத்தினார். ஆகவே எனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கான பொறுப்பினை சபாநாயகரே ஏற்க வேண்டும் என்றார்.
இதன்போதும் மஹிந்த ஆதரவு அணியினர் கூச்சலிட்டுக் குழுப்பம் விளைவித்தனர். அத்துடன் தினேஷ் குணவர்தன எழுந்து நின்று ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய போது ஏனைய உறுப்பினர்களும் எழுந்து நின்றனர்.
எனினும் தினேஷ் குணவர்தனவின் ஒழுங்குப் பிரச்சினைக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
சபை நடுவே கூடினர்.
இதனையடுத்து சபை நடுவே கூடிய மஹிந்த ஆதரவு அணியினர் சபாநாகருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். இந் நிலை நீடித்திருந்ததால் 4.45 மணியளவில் மீண்டும் சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
கூடியது
இதனையடுத்து 6.10 மணியளவில் மீண்டும் சபை கூடிய போது சபாநாயகர் சபையின் கௌரவத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் சபைக்கு அறிவித்தல் விடுத்த சபாநாயகர் வீடியோ மற்றும் ஹன்சாட் ஆகியவற்றைப் பரிசிலித்துப் பார்த்ததில் எந்தவொரு எம்.பி.யினதோ குடும்பத்தாரினதோ பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும் தாஜிதீனின் படுகொலைக்கு காரணமானவர்கள் சபையில் வந்து பேசுகின்றனர் என்று கூறப்பட்ட வாசகத்தை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு உத்தரவிடுகிறேன் என்றார்.
வெ ளிநடப்பு
இதனையடுத்து விவாதத்தில் பேசிய தினேஷ் குணவர்தன எம்.பி
வெ ளிவிவகார அமைச்சு தொடர்பில் பேசிக் கொண்டிருந்தபோது ஆளும் கட்சியினர் இடையூறு விளைவித்தனர். இதனால் கூச்சல் நிலை எழுந்திருந்தது.
இதேவேளை தாம் சபையிலிருந்து வெ ளியேறுவதாக கூறி தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹிந்த ஆதரவு அணியினர் சபையிலிருந்து வெ ளியேறினர்.
இதன்போது ஆளும் கட்சியினர் "உ" சத்தமிட்டனர்
0 Comments