Subscribe Us

மாணவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் புத்தளம் - வட்டக்கண்டல் பாடசாலையின் மூன்றாம் தவணைப் பரீட்சை

பு/வட்டக்கண்டல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் அண்மைக்காலமாக கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைவேர் வீதம் உயர்வாகவே காணப்படுகின்றது. சித்தியடைவோர் வீதம் சுமார் 80மூ தொடக்கம் 100மூ ற்கிடைப்பட்டது எனக் கூற முடிவதோடு பாடசாலைக்கு நற்பெயரையும், கௌரவத்தையும் ஏற்படுத்துவதில் இது நேரடி பங்களிப்பை வழங்குவதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதிகரித்த சித்தி வீதத்திற்கு பாடசாலை நிர்வாகம் வகுத்துள்ள நுட்பமும், தந்திரமும் பற்றி கூறுவது சிறப்பானதாகும்.

இது ஒரு கிராமப் பாடசாலை. இப்பாடசாலையில் அவதானிக்கக் கூடிய விடயம் யாதெனில் 10ஆம், மற்றும் 11ஆம் தரங்களிற்கு மிகவும் திறமையான மாணவர்களே வடிகட்டப்பட்டு உள்வாங்கப்படுகின்றனர். இது இப்பாடசாலை நிர்வாகம் வகுத்துள்ள ஒரு வகையான நுட்பம். அதாவது, கடந்த 5 வருடங்களை நோக்கினால் மூன்றாம் தவணைப் பரீட்சையின் பிரகாரம் தரம் 9, 10 மாணவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான மாணவர்கள் சித்தியடையாமல், வகுப்பேற்றம் செய்யப்படாமல் அதே தரங்களில் மீண்டும் கல்வி கற்கக் கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் இம்முறை இடம் பெற்ற மூன்றாம் தவனைப் பரீட்சையிலும் 9 ஆம் தரத்திலுள்ள  17 மாணவர்களில் 10 மாணவர்களை வகுப்பேற்றம் செய்யாமல் விட்டிருப்பதை அவதானிக்கலாம்.

இந்நிலையில் சித்தியடையாதிருக்கின்ற மாணவர்களில் ஒரு சிலரே மீண்டும் அதே வகுப்புக்களில் கல்வியை தொடர்கின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகிக் கொள்கின்றனர். இவ்விடயம் மாணவர்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளியை வைத்து விடுகின்றன. இன்று இஸ்மாயில் புரத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்குள் 30ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திக் கொண்டு கூலி வேலைகளிலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களிலும் ஈடுபடுதற்கான முக்கிய காரணி தான் தரம் 9, 10 களில் வகுப்பேற்றம் செய்யப்படாமையாகும்.

இறுதிப் பரீட்சையில் சித்தியடையாது இடைவிலகலையும் பெறாத மாணவர்கள் அடுத்தடுத்த தரங்களில் இணைக்கப்படுகின்றதோடு, தமது வயதுக்கேற்ற தரங்களில் கற்கக் கூடிய மாணவர்கள் குறைந்த தரங்களில் மேலும் ஓரிரு வருடங்களை செலவிடக் கூடிய நிலைக்கும் உள்ளாகின்றனர். இப்பாடசாலையில் மூன்று வருடங்கள் தொடர்ந்து ஒரே தரத்தில் கற்கக் கூடிய மாணவர்களும் இருக்கின்றனர். இவர்கள் ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்யும் போது வயது  என்னவாக அமையும்? புத்தளம் வடக்குக் கோட்டத்தில் அமைத்துள்ள எந்தப் பாடசாலைகளிலும் இல்லாததொரு விடயம் புஃவட்டக்கண்டல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இவ்விடயம் இடம்பெறுவது இங்குள்ள நிர்வாகத்தின் வித்தியாசமான கொள்கைகளை வெளிப்படுத்துகின்றது. 

கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் பற்றி பெருமை கொள்கின்ற ஆசிரியர்களும், பிரதேசவாசிகளும் மாணவர்களின் இடைவிலகல்கள் பற்றி அக்கறை கொள்ளாதிருப்பது கவலைக்குரியதொன்றாகவே உள்ளது. அதற்குரிய காரணங்களில் ஒன்று பெரும்பாலானவர்கள்  வெளியூர் ஆசிரியர்கள் ஆவர்.

பொதுவாக கா.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் ஒரு மாணவரின் அடிப்படைக் கல்வித் தகைமையாக பல இடங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. மாணவர்கள் வகுப்பேற்றமின்றி இடைவிலகுவதால் அவர்கள் தமது அடிப்படைக் கல்வித் தகைமைகளைக் கூட பூர்த்தி செய்யாத நிலையிலேயே சமூகத்திற்குள் உள்ளாகின்றனர். 

வகுப்பேற்றம் செய்யாமல் ஓரிரு வருடங்களாக அதே தரங்களில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்களை ஓரிரு தடவைகள் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை அமர்வுகளுக்கு அனுமதியளித்தாலும் அவர்கள் அப்பரீட்சை தொடர்பான மேலதிக அறிவையும், அனுபவத்தையும் பெற வாய்ப்புள்ளது. இந்த அடிப்படைக் கல்வித் தகைமையைக் கூட இப்பாடசாலை நிர்வாகம் உரிய முறையில் வழங்குவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தாமல் மாணவர்களில் கல்வி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவது வேடிக்கையாகவுள்ளது. 

வெறும் கா.பொ.த பரீட்iசையின் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு பெருமையடிப்பதை விட்டும் மாணவர்களில் ஆளுமையைக் கட்டமைக்கும் வேலைகளில் தங்களுடைய கொள்கைகளை வகுப்பது முறையான சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 M.J.M. Jafran,
Puttalam 

Post a Comment

0 Comments