வெள்ளம் நுழைந்த வீட்டில் மீண்டும் நுழையும் போது சில முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். அது உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
* வீட்டுக்குள் நுழைவதற்கு முன் வீட்டின் வெளியே மின்சாரத்திற்கான மெயின் சுவிட்ச் இருந்தால் அதை ஆப் செய்வதன் மூலம் மின் இணைப்பை துண்டித்து விடுங்கள். இது ஈரப்பதமாக இருக்கும் வீட்டுக்குள் மின்சார தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.
* கியாஸ் கசிய வாய்ப்பு இருப்பதால் வீட்டுக்குள் சென்றதும் கியாஸ் கசிந்த வாசனை வருகிறதா என்று பார்க்கவும். கதவு-ஜன்னல்களை திறந்து வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையான காற்று, வெளிச்சத்தை வீட்டினுள் பரவ விடுங்கள்.
* மின்சாரப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு எலக்ட்ரீசியனைக் கொண்டு மின் கசிவு இருக்கிறதா என்று சோதித்து உறுதி செய்தபின் பயன்படுத்தலாம். அதற்கு வசதி இல்லை என்றால் கையில் மின்சாரத்தை சோதிக்க உதவும் டெஸ்டரைக் கொண்டு சுவர்களையும் மற்ற இரும்பு பொருட்களையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
* அருகிலுள்ள மருத்துவமனைகளில் வெள்ளம் வடிந்தபின் தோன்றும் நோய்களுக்கான தடுப்பூசிகள் போட்டு, மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
* இந்த நேரத்தில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்றவை அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அதற்கான மருந்துகளையும் கையில் வைத்திருப்பது நல்லது. நிலவேம்பு கசாயம் அருந்துவது இந்த நோய்களில் இருந்து காப்பாற்றும். நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.
* தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பொருட்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம். அவை கெட்டுப் போய் இருக்கக் கூடும்.
* வீட்டில் இருக்கும் மேல்நிலை, கீழ் நிலைத் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். உடைகள் நீரில் ஊறி இருந்தால் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதை சோப்பு போட்டு நன்றாக துவைத்த பின் கிருமி நாசினி கலந்த நீரில் 6 மணி நேரம் ஊற வைத்து அதன்பின் மீண்டும் அலசி காய்ந்த பின் உபயோகிக்கவும்.
* 3 நாட்களுக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை உண்ணுங்கள். அதுவும் அரை வயிறு உண்டால் போதும். மனமும், உடலும் இயல்பு நிலைக்கு வந்தபின் வழக்கமான உணவு முறையை பின்பற்றலாம்.
* வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தால் அவற்றை இயக்க வேண்டாம். உடனே காப்பீடு நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுது என்றால் அவற்றுக்கான காப்பீடு கிடைக்காமல் போகக் கூடும். முடிந்தால் வீடு, வாகனம், பொருட்கள் மூழ்கிய நிலையில் இருப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது பின்னால் நிவாரண உதவி பெற உதவும்.
* ரேஷன் கார்டு, ஆதார், கல்விச்சான்று, டிரைவிங் லைசென்ஸ், நிலப்பத்திரங்கள் பாதிப்படைந்து இருந்தால் நகலுக்கு விண்ணப்பியுங்கள்.
* எல்லாவற்றையும் விட, உங்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். துவண்டு விடாதீர்கள்.
0 Comments