Subscribe Us

கேரளாவில் 500 ஜோடி இரட்டையர்கள் வாழும் அதிசய கிராமம்

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ளது கோடினிகி கிராமம். 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கிராமத்தில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.

இவர்களில் 1000 பேர் அதாவது 500 ஜோடிகள் இரட்டையர்களாக உள்ளனர். இங்கு வசிக்கும் பல குடும்பங்களில் உள்ளவர்கள் இரட்டையர்களாக இருக்கும் தகவல் சமீபத்தில் வெளி உலகுக்கு தெரிய வந்தது. உடனே ஊடகங்கள் இக்கிராமத்திற்கு படை எடுத்தன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பலரும் இக்கிராமத்தை முற்றுகையிட்டு இரட்டை குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஆராய்ச்சி தகவல்களை சேகரித்தனர். மேலும் இரட்டையர்கள் படிக்கும் பள்ளிக்கும் சென்று அவர்களிடம் பேட்டி எடுக்கும் சம்பவங்களும் நடந்தன.

நாளுக்குநாள் இந்த செயல்கள் அதிகரித்ததால் இரட்டையர்களின் குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். இது பற்றி அவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டனர். தங்களின் அனுமதியின்றி இரட்டையர்களை படம் எடுக்கவோ, பேட்டி எடுத்து பிரசுரிக்கவோ கூடாது என்று மனு கொடுத்தனர்.

இதையடுத்து கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் அனுமதியின்றி யாரும் இரட்டையர்களை படம் எடுக்கவோ, பேட்டி எடுத்து பிரசுரிக்கவோ கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் முகம்மதுஹசன் அறிவித்தார். பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் இரட்டையரின் குடும்பத்தினர் அனுமதித்தால் மட்டுமே ஊருக்குள் நுழைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த கட்டுப்பாடு தெரியாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் நுழைந்த விளம்பர பட தயாரிப்பு குழுவினரை ஊர் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Post a Comment

0 Comments