புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபரொருவர் 23 வருடங்களுக்கு முன் உறைநிலையில் பேணப்பட்ட தனது விந்தணுக்களைப் பயன்படுத்தி சோதனைக் குழாய் முறையில் ஆரோக்கியமான ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையான அதிசய சம்பவம் அவுஸ்திரேலிய பிறிஸ்பேன் நகரில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அவுஸ்திரேலிய 'சணல் நைன்' ஊடகம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குழந்தையானது உலகின் மிகவும் பழைமையான குழந்தையாக விளங்குகிறது.
அலெக்ஸ் போவெல் என்ற மேற்படி நபருக்கு அவரது 15 ஆவது வயதில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டது.
இதனால் அவருக்கு இரசாயன சிகிச்சைக்கு உட்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
இந்த சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளால் அலெக்ஸின் விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு அவர் எதிர்காலத்தில் திருமணம் செய்யும் பட்சத்தில் குழந்தை பாக்கியமற்ற நிலைக்கு உள்ளாக நேரிடும் என்பதை உணர்ந்த அவரது மாற்றான் தாயாரான பற்றீசியா போவெல், அலெக்ஸின் விந்தணுக்களை உறை நிலையில் பேண நடவடிக்கை எடுத்தார்.
அவரது இந்த முன்னெச்சரிக்கையான செயற்பாட்டின் காரணமாகவே மேற்படி உலகின் பழைமையான குழந்தை பிறப்பது சாத்தியமாகியுள்ளது.
அலெக்ஸ் போவெல் இரசாயன சிகிச்சைக்கு முதன் முதலாக உட்படுத்தப்பட்ட போது அவரது வயது 18 ஆகும் மேற்படி சிகிச்சைக்கு முன் அவரது விந்தணுக்களை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து சுமார் 20 வருடங்கள் கழித்து 'வி' என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் பெண்ணை சந்தித்து காதல் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்த அலெக்ஸ் போவெல், 23 வருடங்களுக்கு முன் உறை நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தனது விந்தணுக்களைப் பயன்படுத்தி குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
பிறந்த குழந்தைக்கு சேவியர் போவெல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


0 Comments