உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.
மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது.
இதுதவிர, இந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் 3,692 பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டு மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தபடியாகவே உள்ளனர்.
அன்காரா நாட்டு கடல் எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைந்து விடாமல் அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கே அகதிகளாக குடியேறி விடலாம் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில், கிரீஸ் நாட்டில் நுழைவதற்காக சிரியாவைச் சேர்ந்த சிலர் மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகளில் பயணம் செய்து கொண்டிருந்தனர். பார்மகோனிசி தீவு அருகே வந்தபோது படகு திடீரென நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் கிரீஸ் கடலோர காவல் படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஐந்து குழந்தைகள், ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் என பத்து உடல்களை மீட்டதுடன், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 7 பேரையும் மீட்டனர். மேலும் சிலரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.


0 Comments