முதலில் வரதட்சணை என்பது பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் முன்னர் மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்கு செல்வம், பொருள் கொடுத்து அழைத்து வருவதாக தான் இருந்தது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. காலப் போக்கில் இது மருவி, பெண் வீட்டார் மணமகனுக்கு தருவது போன்று மாறிவிட்டது.
உண்மையில் வரதட்சணை கொடுப்பது என்பது ஒரு வகையிலான குற்ற செயல் தான். எதிர்பார்ப்பதும் தவறு, தருவதும் தவறு. மணமகன் வீட்டார் தான் வரதட்சணை எதிர்பார்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால், உண்மையில் பெண் வீட்டார் எதிர்பார்ப்பது தான் அதிகம். அதைப்பற்றி இனிக் காண்போம்….
அரசாங்க வேலை
மணமகன் நிலையான வேலையில் இருக்க வேண்டும். அதிலும் போனஸ், ஊதிய உயர்வு வருடா வருடம் கிடைப்பது போன்று இருக்க வேண்டும். அரசாங்க வேலை, ஐ.டி வேலை என்றால் முன்னுரிமை. இது திருமணமா அல்ல வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா?
வெளிநாடு போகும் வாய்ப்பு
பெரும்பாலும் ஐ.டி வாலிபர்களை தேடித் பிடிப்பதே எப்படியாவது அவன் வெளிநாடு சென்றுவிடுவான் என்பதற்காக தான். இதுவும் ஓர் காரணம். வெளி ஆட்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் அல்லவா, “பையன் வெளிநாடு போகப் போறான் தெரியுமா..” என்று.
வீடு
மிகவும் முக்கியமாக, சொந்த வீடு இருக்க வேண்டும். இல்லையேல் வேண்டாம். சரி, திருமணத்தின் போது சொந்த வீடு வைத்திருப்பவன், ஏதோ கால சூழ்நிலை காரணமாக அதை விற்கும் நிலை ஏற்பட்டால், விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவீர்களா?
கார்
பைக் எல்லாம் கூட வேண்டாம் கார் தான் வேண்டும். “அதுக்கு நீங்கள் மாருதி கம்பெனி ஒனரதான் கட்டிக்கணும்…” திருமணத்திற்கு பார்க்கும் ஆண் மகன் நல்ல வேலையில் இருந்தால் போதாதா? திருமணத்தின் போதே அவன் பேரன், கொள்ளுப்பேரன் போன்றவர்களுக்கும் சேர்த்து சம்பாதித்து வைத்திருக்க வேண்டுமா?
தனிக் குடித்தனம்
பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று, தனிக் குடித்தனம். இந்த எதிர்பார்ப்புக்கு எல்லாம் வரதட்சணை என்று பெயரில்லையா?
அக்கா, தங்கை கூடாது
அப்பா, அம்மா உடன் இருக்க கூடாது, உடன் பிறப்புகள் இல்லாத மணமகன் தேவை. இருவர் மட்டும் தனியே இருப்பதற்கு பெயர் எப்படி குடும்பம் ஆகும்.
பிஸியாக இருக்க வேண்டும்
நல்ல, ஊதியம், ஆன்சைட் வாய்ப்பு, கை நிறைய சம்பளம், பதவி உயர்வு என பிஸியாக இருக்க வேண்டும். மேலும் இவர்களுடனும் வீட்டில் தினமும் அதிக நேரம் செலவிட வேண்டும். இது சாத்தியமற்ற எதிர்பார்ப்பு, இதை அந்த பிரம்மன், சிவனால் கூட இந்த கலியுகத்தில் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது.
0 Comments