அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை மற்றும் சம்மாந்துறை நகரையும் இணைக்கும் வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் மற்றும் பிரயாணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாவிதன்வெளி பிரதேசத்தினையும் கல்முனை நகரை இணைக்கும் கிட்டங்கி தாம்போதிய வீதி மற்றும் சம்மாந்துறை நகரை இணைக்கும் வழுக்கமடு வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவகின்றது.
தினமும் விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளம் பாய்ந்து வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொளனிகள், மத்திமுகாம், நாவிதன்வெளி, ஏத்தாளைக்குள, வீரச்சோலை போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மழை தொடர்ந்து பெய்துவருவதால் நாவிதன்வெளி பிரதேசத்தின் தாழ்நிலப் பிரதேசத்திலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபயம் ஏற்பட்டுள்ளதுடன், பிரதேசத்திலுள்ள வயல் வெளிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் மற்றும் பிரதேச மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
(எம்.எம்.ஜபீர்)
0 Comments