Subscribe Us

header ads

பிரியாணியில் பூனை – மக்களே உஷார்

சென்னை சாலையோரக் கடைகளில் 50 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் சிக்கன் பிரியாணி கிடைக்கிறது என சந்தோஷப்படுகிற நபரா நீங்கள்? உஷார்! நீங்கள் சாப்பிடுவது, பூனைக்கறி பிரியாணியாக இருக்கலாம்!
அதிர்ச்சி அடைய வேண்டாம், இது நிஜம்! அண்மைக் காலமாக சென்னையில் அடுத்தடுத்து பூனைகள் திருட்டு போவதும் கொத்து கொத்தான எண்ணிக்கையில் பூனைகளுடன் சிலர் கைதாவதும் தொடர் கதையாகி வருகிறது. இப்படி திருடப்படும் பூனைகளைத்தான் சிலர் சாலையோர பிரியாணி கடைகளுக்கு விற்கிறார்களாம். அவற்றை கோழி இறைச்சி அல்லது மாட்டு இறைச்சியுடன் கலந்து கட்டி விற்கிறார்கள்.
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 185 ரூபாய். அதே சமயம் மூன்றரை கிலோ எடையுள்ள பூனை 100 முதல் 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. சிக்கனுடன் மூன்றில் ஒரு பங்கு முதல் சரி பாதி அளவுக்கும் கூட சில இடங்களில் பூனைக்கறியை கலந்து விடுகிறார்களாம்.
சாப்பிடுகிறவர்கள் சிக்கனுக்கும் பூனைக்கறிக்கும் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சமையலில் சில சூத்திரங்களை கையாளுகிறார்களாம். அதையும் மீறி பூனைக்கறி சற்றே புளிப்புடன் காட்டிக் கொடுக்கும். ஆனால் வாடிக்கையாளர்கள் இந்த வித்தியாசத்தை கண்டறிந்தாலும் அது பூனைக்கறி என்பது தெரியாது.
பெரும்பாலும் “டாஸ்மாக்“ கடைகளை ஒட்டிய சிறு கடைகள் தான் இந்த பூனைக்கறி பிசினஸ்காரர்களின் டார்கெட்! சிக்கன் என குடிமகன்கள், “ஆஹா பேஷ் பேஷ்! என்றபடி பூனைக்கறியை ருசித்து சாப்பிட்டுவிட்டு போகிறார்களாம்.
இந்த பூனைக்கறி பிசினஸ் குறித்து, விலங்குகள் நல அமைப்பு(பீப்பிள் பார் கேட்டில்ஸ் இன் இந்தியா) ஒன்றின் நிர்வாகி அருண் பிரசன்னா நம்மிடம் பேசினார். “சென்னையில் பெரும்பாலும் நரிக்குறவர்கள்தான் இப்படி பூனைகளை பிடித்து விற்கும் வேலையைச் செய்கிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது எங்களுக்கு தகவல் தருகிறார்கள். நாங்களே பல இடங்களில் சோதனை நடத்தி இதுவரை 40க்கும் மேற்பட்ட பூனைகளை மீட்டுள்ளோம்.
பூனைகளை கட்டையால் அடித்தும் வலையை பயன்படுத்தியும் அவர்கள் பிடிக்கின்றனர். பின்னர் அவற்றுக்கு மயக்க மருந்து கொடுத்து கூண்டுகளில் அடைக்கிறார்கள்.
பிடிப்பட்ட பூனைகளை சென்னையில் செங்குன்றம், பல்லாவரம், ஆவடி போன்ற பகுதிகளில் உள்ள சாலையோர உணவகங்களுக்கு அவர்கள் விற்கிறார்கள். அண்மையில் பல்லாவரம் பகுதியில் பூனைகளை திருடும் கும்பலை சேர்ந்த ஒரு சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தபடியே வீடியோவில் அவனது வாக்குமூலத்தை பதிவு செய்தோம்.
“ பல்லாவரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருப்பவர்கள் தான் பெரும்பாலும் பூனைகளை திருடுவதாகச் சொல்லப்பட்டதால், அவர்களை சந்தித்துப் பேசினோம்.
“நாங்களும் பூனை பிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்றுதான் முயற்சிக்கின்றோம். ஆனால் ‘மியாவ்’ என்ற சத்தத்தைக் கேட்டால் நாக்கில் எச்சில் ஊறுகிறது” என்றார் ஒருவர் வேடிக்கையாக! பூனைகளை மொத்தமாக வெளி ஆட்களுக்கு விற்பது குறித்து மூச்சுவிட மறுக்கிறார்கள் இவர்கள்-
இவர்கள் தங்களுடைய விசிட்டிங் கார்டில் “பூனை பிடிப்பவர்கள், நாய் பிடிப்பவர்கள்“ என ஒவ்வோரு விதமாக அச்சிட்டு மக்களிடம் கொடுக்கிறார்கள். சில அப்பார்ட்மென்டு”களில் பூனை தொல்லை தாங்காமல் பணம் கொடுத்து பிடிக்கச் சொல்கிறார்களாம், ஆக, பூனைகளை வாங்கும் இடத்திலும் பணம், விற்கும் இடத்திலும் பணம் என “டபுள் பேமண்ட்” இவர்களுக்கு கிடைக்கிறது” அவனது தந்தை மற்றும் உறவினர்கள் ரெகுலராக பூனைகளைப் பிடிப்பதையும் பலர் தேடி வந்து அவற்றை வாங்கிச் செல்வதையும், சில இடங்களுக்கு இவர்களே கொண்டுபோய் கொடுப்பதையும் அந்த சிறுவன் உறுதிப்படுத்தினான்.
பூந்தமல்லியில் ஒரு தியேட்டர் அருகே உள்ள மதுக்கடை பார் ஒன்றில் முழுக்க பூனை கறியே பரிமாறப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
தவிர, தள்ளுவண்டி மாடலில் உள்ள பல சூப் கடைகளில் மட்டன் மற்றும் சிக்கனுக்குப் பதிலாக பூனைக்கறி சூப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். 2002 ம் ஆண்டு இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி ஆடு, கோழி போல மனிதர்களின் உணவு பட்டியலில் பூனை இல்லை. எனவே பூனைகளை பிடித்து சமைப்பது சட்டவிரோதம். தவிர பூனைக்கறியை சமைத்து சிக்கன் என்ற பெயரில் விறபது பெரிய மோசடி இவர்களுக்கு தைரியம் இருந்தால் பூனைக்கறி இங்கு கிடைக்கும் என போர்டு போட்டு விற்கட்டும்! என்றார் கோபமாக!
அக்டோபர் 4ம் தேதி இரவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் சிலர் பூனைகளை வேட்டையாடியதை கேள்விப்பட்டு புளூ கிராஸ் அமைப்பினர் அங்கு சென்றனர். அங்கு 6 பூனைகளுடன் 5 ஆசாமிகளை மடக்கிப் பிடித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கைது செய்தார்.
இது பற்றி இன்ஸ்பெக்டர் ராஜசேகரனிடம் பேசியபோது “தங்கள் குடும்ப திருமண விழாவில் சமைப்பதற்காக பூனைகளைப் பிடித்ததாக அவர்கள் கூறினர். ஜாமீனில் விடக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர்களை விடுவித்தோம். எனினும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு வருட சிறை தண்டனை கிடைக்கும் என்றார்.
புளூ கிராஸ் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் கூறுகையில், “சென்னையின் பல காவல் நிலையங்களில் பூனை திருட்டு தொடர்பான புகார்களை கொடுத்துள்ளோம். நுங்கம்பாக்கத்தில் கைது செய்யப்பட்ட நரிக்குறவர்கள் 3 மீன்பாடி வண்டிகளில் வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் 150 சாக்குப் பைகள் மற்றும் 8 வலைகளை வைத்திருந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்களின் சொந்த பயன்பாட்டிற்காக பூனை திருடியதாகத் தெரியவில்லை. ஏதோவொரு வியாபார நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது எனக் கூறினார்.
பூனைக்கறி சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என செல்லப் பிராணிகள் சிறப்பு மருத்துவர் ஆர். ஜெயபிரகாஷிடம் கேட்டோம். பூனைக்கறியில் யூரியாவின் அளவு அதிகமாக இருக்கும். எனினும் இதை மற்ற இறைச்சிகளுடன் கலக்கும்போது பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. பூனைக்கறியால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு சான்ஸ் இல்லை. ஆனால் மயக்க மருந்து செலுத்தி கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பூனைகளை சாப்பிட்டால் ஆபத்துதான். அதனால் மனிதர்களின் நரம்பு மண்டலம், சிறுநீரகம் ஆகியன பாதிக்கப்படும் என்றார் டாக்டர் ஜெயப்பிரகாஷ்.
உணவுப் பாதுகாப்பு கூடுதல் கமிஷனர் டாக்டர் வாசகுமாரிடம் இது குறித்து கேட்டபோது சாலையோரக் கடைகளில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சுகாதாரம் குறித்து நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். பூனைக்கறி விற்பனை குறித்து எங்களுக்கு தகவல் இல்லை. ஏதாவது குறிப்பிட்ட கடை மீது புகார் தெரிவித்தால் விசாரிப்போம்! என்றார் அவர்.
ரன் படத்தில் காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு “கா_கா_“ என நடிகர் விவேக் கத்துவதாக ஒரு காட்சி உண்டு. அதுபோல, ‘மியாவ்…. மியாவ்…! என சென்னைவாசிகள் கத்தாமல் இருந்தால் சரி!

Post a Comment

0 Comments