முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகும்புக்கடவல பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை தொடராகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டுள்ள அயலவர்கள் மஹகும்புக்கடவல பிரதேச செயலக சிறுவர் நன்னடைத்தை அதிகாரிக்கு வியாழக்கிழமை (08) தகவல் வழங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே குறித்த சந்தேக நபர் வியாழக்கிழமை(08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்மல்கஸ்வௌ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதணைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.


0 Comments