அதிக மதுபோதையில் நோயாளியொருவரைப் பார்ப்பதற்காக மாரவில வைத்தியசாலைக்குச் சென்ற இருவரைக் கைது செய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ மற்றும் லுணுவில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியொருவரைப் பார்ப்பதற்காக, நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் இவ்விருவரும் அதிக மது போதையில் சென்றுள்ளனர்.
இவ்வாறு வந்தவர்களுள் ஒருவர் வைத்தியசாலையின் ஜன்னல் கதவில் தடுமாறி வீழ்ந்தமையினால் ஜன்னல், கதவு சேதத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு போதையில் குழப்பம் விளைவித்த குறித்த இருவரையும் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிடித்து வைத்தியசாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் அவ்விருவரையும் வைத்தியசாலை பொலிஸார் கைது செய்து மாரவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள மாரவில பொலிஸார், கைது செய்யப்பட்ட இருவரையும் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
0 Comments