15ஆவது தடவையாகவும் நடத்தப்படும் எல்.எஸ்.ஆர். கொழும்பு மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகும். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் மொத்தமாக 6600 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் இதில் பங்குகொள்கின்றனர்.
கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அருகில் ஆரம்பமாகும் இந்த 'கொழும்பு மரதன்' ஓட்டப் போட்டியானது பொரளை, தெமட்டகொடை, வத்தளை வழி யாக ஹமில்டன் வாவி பாதையூடாக பமுனுகம, தலாஹேன, பிட்டிபத்த ஊடாக நீர்கொழும்பு கடற்கரை மைதானத்தில் நிறைவடையும்.
இதன் பிரதான பிரிவான திறந்த மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 2500 அமெரிக்க டொலர்களும் (345, 000 இலங்கை ரூபா) விமானப் பயணச் சீட்டொன்றும் வழங்கப்படும்.
இரண்டாமிடம் பெறுபவருக்கு 1500 அமெரிக்க டொலர்களும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 1000 அமெரிக்க டொலர்களும் பரிசாக வழங்கப்படும். மேலும், 4ஆம், 5ஆம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே 500, 200 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும்.
இந்த மரதன் ஓட்டப் போட்டிக்கு சீனாவிலிருந்து 28 பேரும், இந்தியாவிலிருந்து 20 பேரும், கென்யாவிலிருந்து 17 பேரும், மாலைதீவிலிருந்து 8 பேரும் பங்கேற்கின் றனர்.
இதுதவிர, ஐக்கிய இராச்சியம், பாகிஸ்தான், கனடா, ஐக்கிய அமெரிக்கா, எத்தியோப்பியா, ஜேர்மனி, நியூஸிலாந்து உள்ளிட்ட 39 நாடுகளிலிருந்து வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றமை விஷேட அம்சமாகும்.
இப் போட்டியின் பரிசளிப்பு விழா நாளை திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நீர்கொழும்பு கடற்கரை மைதானத்தில் நடை பெறும்.
0 Comments