ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் வழங்கும் நிகழ் வில் மிகவும் சுவாரஷ்யமான சம்பவங்களை காணக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நண்பகல் 12 மணிக்கு அமைச்சரவை நியமனம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் அவைக்கு வருகை தந்தனர். இதன்போது கட்சி பேதங்கள் பாராமல் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்தவுடன் முழு சபையும் எழுந்து நின்றது. அதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 மணிக்கே வருகை தந்திருந்தனர். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் தேர்தல் கால வாக்குவாதங்களை மறந்துவிட்டு மிகவும் நகைச்சுவையான முறையில் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். எஸ்.பி திஸா நாயக்க, ஜோன் அமரதுங்க, சுசில் பிரேமஜயந்த, ரவி கருணா
நாயக்க, ராஜித்த சேனாராத்ன ஆகியோர் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர்.
அதேபோன்று லக் ஷ்மன் கிரியெல்ல, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரும் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தனர்.
மேலும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்கு அமைச்சர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. அமைச்சர்கள் அமர்ந்திருந்த கதிரைக்கு பின் பகுதியில் அவர்களது பாரியார்கள் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் அமைச்சரவை நியமனங்கள் வழங்குவதற்கான நேரம் ஆரம்பமானது. இதன்போது வருகை தந்த அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து விட்டு கையொப்பமிடுவதற்கு பேனா வை தேடிக்கொண்டிருந்தார். இறுதியில் அவர் தனது பைக்குள் கைவிட்டு பார்த்துவிட்டு சற்று நேரத்துக்குள் பேனாவை கண்டுபிடித்து கையொப்பமிட்டார்.
இதேவேளை,ஜோன் அமரதுங்க சத்தியப் பிரமாண கடிதத்தை வாசிப்பதற்கு முன்னர் கையொப்பமிட்டு விட்டு பின்னர் வாசிக்காமலேயே ஜனாதிபதியிடம் கோவையை ஒப்படைக்க முனைந்த போது ஜனாதிபதி செயலாளர் உடனே சத்தியப் பிரமாண கடிதத்தை வாசிக்குமாறு கூறினார். அதன்பின்னர் அமைச்சர் சத்தியப் பிரமாணத்தை வாசித்தார்.
அதேபோன்று முன்னைய பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரும் புதிய அமைச்சரவையின் பெற்றோலிய துறை அமைச்சரான சந்திம வீரக்கொடி சத்தியப் பிரமாண கடிதத்தை வாசித்தபின்னர் கையொப்பம் இடாமல் ஜனாதிபதியிடம் கையளிக்க முற்பட்டபோது சிறிது நேரம் சிந்தித்து அதன்பிறகே தான் கையொப்பமிடவில்லை என்பதனை அறிந்து அதன்பின்னர் கதிரையில் அமர்ந்து கையொப்பமிட்டார். இதன்போது முழு அவையுமே சிரிப்பு சத்தத்துடன் காணப்பட்டது.
அதேபோன்று அமைச்சரவை நிகழ்விற்கு மூன்று அமைச்சர்கள் நேரம் கடந்து வந்தனர். நேற்று வெ ள்ளிக்கிழமை என்பதனால் முஸ்லிம் அமைச்சர்கள் பள்ளிவாசலுக்கு சென்று வந்தமையினால் ஜனாதிபதி உரைநிகழ்த்தியதன் பின்னரே அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டனர்.
அதேபோன்று பிரதமர் உரைநிகழ்த்தியதன் பின்னர் மேடையிலிருந்து கீழே வரும் போது படியிலிருந்து கால் சரிந்து கீழே விழுந்துவிடும் நிலைக்கு சென்றார். எனினும் அருகில் இருந்தோர் அவரை கைப்பிடித்தனர்.
இறுதியான நிகழ்வு நிறைவடைந்த பின்னர் கட்சி பேதங்கள் பாராமல் இரண்டு கட்சியினரும் கைலாகு கொடுத்து ஒருவருடன் ஒருவர் கருத்து பரிமாறிக்கொண்டனர்.
0 Comments