பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வும் நானும் சர்வதேசத்திற்கு அடிபணிந்து தேசதுரோகிகளாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டுகின் றனர். புதிய அரசாங்கம் என்ற வகையில் சர்வதேச அழுத்தத்திற்கு நாம் ஒருபோதும் அடிபணிந்து செயற்படப்போவதில்லை.
எமது பயணத்தில் நாம் உண்மையான தேசப் பற்றுள்ளவர்கள் என்பதனை விரைவில் நாட்டுக்கு நிரூபித்துக் காட்டுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்போ அல்லது 2020 இற்கு முன்போ எக்காரணம் கொண்டும் இந்த பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும் என்று நினைக்க வேண்டாம். மேலும் ஐந்து வருட அரசியலில் குறை நிறையுடைய குழந்தை பிறப்பினை ஒருபோதும் எதிர்பார்க்க வேண்டாம். அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தரமான அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பத்து வருடங்கள் ஜனாதிபதி பதவியிலிருந்து விட்டு தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியுமாயின் அமைச்சர்களாக இருந்தவர்கள் இரஜாங்க அமைச்சர்களானால் என்ன தவறு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
19 இரஜாங்க அமைச்சர்கள் மற்றும் 21 பிரதி அமைச்சர்களும் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கும் நிகழ்வில் உரைகலந்துகொண்டுப உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய யுகத்திற்கு ஏற்றால் போல் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் நிறுவுவதற்கு ஆதரவு நல்கியமையிட்டு நான் இரண்டு கட்சிகளினதும் பிரதிநதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.
ஜனாதிபதி என்ற வகையில் நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என்று அனைவரும் அமைச்சு பதவிகளினூடாக கிடைக்கும் வரபிரசாதங்களை பெற்று, எமது வாழக்கை மேம்படுத்துவதற்கு பதவிகளை பெறவில்லை. மாறாக நாட்டு மக்களுக்கு உரிய வகையில் சேவையாற்றுவதற்கேயாகும். இது எமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும்.
அரசியல் பயணம் என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் எமது பயணத்தில் பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளமையை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தும் பயணத்தின் போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.
நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம் என்று மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு நாம் துரோகம் செய்ய கூடாது.
நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து தற்போது கருத்தொருமைப்பாட்டு அரசியல் பயணத்தில் இணைந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளும் வேறுவேறாக ஆட்சி செய்த தருணத்தில் பல்வேறு உயிர்களை பழி கொடுக்க வேண்டியேற்பட்டது. இரண்டு கட்சியினரும் முட்டி மோதி கொண்டனர். ஆனால் தற்போது நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இதேவேளை தற்போது மைத்திரியும் ரணிலும் சர்வதேசத்திற்கு ஏற்றால் போல் ஆட்சியை கொண்டு செல்வதாகவும் சர்வதேசத்திற்கு அடிப்பணிந்து நடப்பதாகவும் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகின்றனர். தேசதுரோகிகளாக நடப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். எந்த தருணத்திலும் நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும். புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தும் பயணத்தின் போது நாம் சர்வதேசத்திற்கு அடிப்பணிந்து செயற்படவில்லை.
புதிய அரசாங்கம் எக்காரணம் கொண்டு சர்வதேச நாடுகளின் அச்சறுத்தல்களுக்கோ அழுத்தங்களுக்கோ பயந்து அடிப்பணிய போவதில்லை. எமது பயணத்தின் அடுத்த நகர்வுகளின் போதும் எதிர்வரும் காலங்களின் போதும் நாம் உண்மையான தேசப்பற்றுள்ளவர்கள் என்பதனை நிருபித்து காட்டுவோம். நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நாம் ஒருபோதும் செயற்படபோவதில்லை.
நாட்டில் உள்ள அனைத்து மத சிந்தனைகளையும் கொண்டு நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும். பிளவுக்கு முன்னுரிமை வழங்காது ஒன்றிணைந்து செயற்படுவதே சிறந்த வழிமுறையாகும். நேர்மை, தியாகத்தை கொண்டு புதிய அரசியல் கலாசாரத்திற்கான பயணத்தை தீர்மானிக்க வேண்டியுள்ளது. இரண்டு வருடங்களின் பின்னர் தேசிய அரசாங்கம் தொடர்பில் உறுதியான முடிவினை எடுக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகளை கொண்டு தற்போது பலர் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். .இந்த அரசாங்கம் நிரந்தரமானது அல்ல. நீண்ட காலம் பயணிக்காது. விரைவில் இந்த அரசாங்கம் கலைந்து விடும் என்று பரவலாக குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அடுத்த ஐந்து வருடத்திற்கு முன்போ அல்லது 2020 இற்கு முன்போ எக்காரணம் கொண்டு இந்த அரசாங்கத்தை கலைக்கலாம் என்று நினைக்க வேண்டாம்.
அடுத்த ஐந்து வருடத்திற்குள் அரசியல் குறை நிறை கொண்ட குழந்தை பிறப்பினை எதிர்பார்க்க வேண்டாம். அமைச்சர்கள் ,இரஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தெரிவின் போதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நானும் பாரிய சவால்களை எதிர்கொண்டோம். அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அனைவரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். வெளியில் இருந்து விமர்சனம் செய்வது இலகுவாகும். இருப்பினும் குறித்த சவால்களுக்கு நாம் முகங்கொடுக்கும் போதுதான் அதன் வேதனைகள் புரியும். எவ்வாறாயினும் எமது பயணத்தின் போது பல்வேறு சவால்களை நாம் வெற்றி கொள்வோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பத்து வருடங்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து விட்டு தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியுமாயின் ஏன் அமைச்சர்களாக இருந்தவர்கள் இரஜாங்க அமைச்சர்களானால் என்ன தவறு உள்ளது.
இதேவேளை ஊழல் மோசடிகளிலிருந்து முழுமையாக இந்த நாட்டை விடுப்பட செய்யவேண்டும். ஆகையால் உங்கள் மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை மோசடிகளின்றி செய்து காட்டுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments