படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற சிறுமியின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன. இன்றைய தினம் சேயா செதவ்மி தனது 5 ஆவது பிறந்த தினத் தைக் கொண்டாட இருந்த நிலையிலேயே நேற்று மாலை அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.
இந்த நிலையில் சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை விசாரணைகளில் எவரும் நேற்று மாலை வரை கைது செய்யப்படாத போதும் மூவர் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இன்று அல்லது நாளைக்குள் இடம்பெறும் சில முக்கியமான விஷேட சோதனைகள் மற்றும் அறிவியல் பெளதீகவியல் சான்றுகளை முன்னிறுத்திய விசாரணைகளில் சந்தேக நபரை அல்லது நபர்களை உறுதியாக அடையாளம் காணக் கூடியதாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்கு டீ.என்.ஏ.மூலக்கூறுகள் மற்றும் அறிவியல் ரீதியிலான தடயங்களை பயன்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளமைக்கமைய அந் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மாலை 5.00 மணி வரையில் இந்த விவகாரம் குறித்து சிறுமியின் தாய் மற்றும் தந்தை, பாட்டன் , பாட்டி உள்ளிட்ட 20 இற்கும் அதிகமானோரின் வாக்கு மூலங்களை பொலிஸார் பதிவு செய்திருந்தனர்.
கொட்டதெனியாவப் பிரதேசத்தில் உளவுப் பிரிவு உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி இந்த படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பல தகவல்களையும் சேகரித்துள்ளனர். அதன்படி மேலதிக விசாரணைகள் இடம்பெறும் நிலையில் விரைவில் சந்தேக நபர்கள் கைதாவர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந் நிலையில் இவை தொடர்பிலான விசாரணைகளுக்கு மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக திவுலபிட்டிய மற்றும் கந்தானை ஆகிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் அந்த குழுக்களில் அங்கம் வகிப்பதாகவும் பொலிஸ் தலமையகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஒட்டு மொத்த விசாரணைகள் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொட்டதெனியாவ படல்கம அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி கடந்த சனிக்கிழமை அதிகாலை காணாமற்போயிருந்தார். அதன்பின்னர் மறு நாள் அவர் வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஓடையொன்றின் அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மேல் மாகாணத்தின் வடக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.ஜி.குலரத்ன ஆகியோரின் கட்டுப்பாட்டில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அபேவிக்ரமவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments