ஆப்கானிஸ்தானின் கான்ஸி மாகாணத்தில் இன்று அதிகாலை சிறையின் மீது குண்டுகளை வீசியும், சிறை அதிகாரிகளை துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 கைதிகளை விடுவித்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தொடங்கிய இந்த தாக்குதல் சில மணி நேரம் நீடித்ததாகவும், இதில் 4 போலீசார் கொல்லப்பட்டதாகவும் பத்து போலீசார் மற்றும் நான்கு கைதிகள் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 400 அப்பாவிகளை விடுவித்து தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என அப்பகுதி தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள மத்திய சிறையின் மீதும் இதேபோன்ற அதிரடி தாக்குதல்களை நடத்திய தலிபான் தீவிரவாதிகள், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்களது இயக்கத்தை சேர்ந்த தளபதிகளையும், படையினரையும் விடுவித்து சென்றது நினைவிருக்கலாம்.
0 Comments