இலங்கையில் தற்போது இருதய நோய் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டளவில் இந்நிலை மாறி புற்றுநோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
கதீஜா நம்பிக்கை நிதியம் மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு சுமார் 200 மில்லியன் (20 கோடி) ரூபா பெறுமதியான நவீன பெட் சீ.ரி.ஸ்கேன் இயந்திரமொன்றினை நன்கொடையாக வழங்குவதற்கான திட்டமொன்றினை வகுத்துள்ளது.
இந்த ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கான நிதியுதவிகள் பொலிஸ் திணைக்களம்,ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் உட்பட பல பொது நிறுவனங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள உபாலி நவலோக்க ஹோட்டலில்கதீஜா நம்பிக்கை நிதியத்தின் தலைவர் எம்.எஸ்.எச்.முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
இலங்கையில் தற்போது இருதய நோய் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டளவில் இந்நிலை மாறி புற்றுநோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். ஏனென்றால் புற்று நோய் மரணங்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
இலங்கையில் வருடாந்தம் 13500 பேர் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள். பெண்கள் அதிகமானோர் மார்பகப் புற்று நோய்க்கே ஆளாகிறார்கள். புற்று நோய்க்கு ஆளாகும் பெண்களில் 25 வீதமானோர் மார்பகப் புற்று நோய்க்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். மார்பகப் புற்று நோய் வயது வந்தோர்களுக்கே ஏற்படுகிறது. என்றாலும் அண்மையில் 25 வயதுள்ள திருமணமாகாத பெண் ஒருவர் மார்பகப் புற்று நோய்க்குள்ளாகி வைத்தியசாலைக்கு வந்தார்.
அதேபோன்று ஆண்களில் அதிகமானோர் முகப் புற்று நோய்க்குள்ளாகிறார்கள். முகம் என்று கூறும் போது வாய், தொண்டை காதுகளில் ஏற்படுகிறது. வெற்றிலை, மதுபான பாவனை, புகைத்தல் மற்றும் போஷாக்கற்ற உணவு காரணமாகவே புற்றுநோய் ஏற்படுகிறது. முகச்சுத்தத்தை சரியாக பேணாமல் இருக்கின்றமையும் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளுக்கான செலவுகள் மிகவும் அதிகமாகும். சாதாரண மக்களால் இந்த செலவுகளை ஏற்க முடியாது. தனியார் வைத்தியசாலைகள் சிகிச்சைகளுக்கென்றும் ஸ்கேன், வைத்தியர்களின் கட்டணமென்றும் மில்லியன் கணக்கான ரூபாக்களை அறவிடுகின்றன.
மார்பக புற்று நோயை ஊசியேற்றுவதன் மூலம் சுகமாக்க வேண்டுமாயின் குறைந்தது 17 ஊசிகள் ஏற்ற வேண்டும் ஒரு ஊசியின் விலை 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவாகும். பரிசோதனைகளுக்கு 3 இலட்சம் ரூபா அறவிடப்படுகிறது. சத்திர சிகிச்சைக்கு 8 இலட்சம் ரூபா அறவிடப்படுகிறது. இவ்வாறு தனியார் வைத்தியசாலைகள் பெருமளவு பணத்தினை அறிவிடுகின்றன.
அதனால் அரசாங்க வைத்தியசாலைகளில் புற்று நோய்க்குள்ளானவர்கள் விரைவில் முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமாயிருந்தால் அதற்கான வசதிகள் அங்கு இருக்க வேண்டும். அந்த வகையில் கதீஜா நம்பிக்கை நிதியம் 20 கோடி ரூபா செலவிலான பெட் சீ.ரி.ஸ்கேன் இயந்திரத்தை அன்பளிப்புச் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
சுகாதார அமைச்சு இதற்கான அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கென மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பெயரில் தனியான வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்படும் என்றார்.
நிகழ்வில் மஹரகம புற்றுநோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், டிமோ மோட்டார் கம்பனியின் தலைவர் ரஞ்சித் பண்டிககே, கதீஜா நம்பிக்கை நிதியத்தின் தலைவர் எம்.எஸ்.எச்.முஹம்மத் உட்பட கதீஜா நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்கள், வங்கிகளின் உயரதிகாரிகள், புத்திஜீவிகள், ஹஜ், உம்ரா முகவர் நிலையங்களின் உரிமையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments