Subscribe Us

header ads

வினைத்திறனான அரசியல் பலத்தில் நமது பங்கு

-Mihwar Ahmed Mahroof-


எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் வேட்பாளர்களின் ஆவேசமான மேடைப்பேச்சுக்கள், சாத்தியமுள்ள / சாத்தியமற்ற வாக்குறுதிகள் என்பன உச்சத்தை அடைந்துள்ளது.

இதுவரை காலம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களை விடவும் சற்று வித்தியாசமான தேர்தலையே எதிர் நோக்கியுள்ளோம்.
முன்னணியில் திகழும் கட்சிகள் தங்களுக்குள் கடந்த ஜானாதிபதி தேர்தலைப்போன்று ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, கடந்த கால அரசியலில் இருந்த களைகளைப் பிடுங்கி எறியவேண்டும் என்ற ஓர் சிறந்த நோக்கத்துடனும், தாம் உருவாக்கிய அல்லது தனது வாழ்நாட்களையே அர்ப்பணித்து உழைத்த கட்சிகளை விட்டு நீங்கியும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வாக்குறுதிகள் வழங்கப்படுவது தேர்தல் காலங்களில் புதிது இல்லை என்றாலும், அவ் வாக்குருதிகளை நம்பி புல்லடி இடுவதை விடவும், சமகால அரசியலுடன் நமது நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டைக் கருத்திற்கொண்டு நமக்கு வழங்கப்பட்ட வாக்கு இடும் அமானிதம் பேணப்படவேண்டும் என்பதில் நாம் ஆணித்தரமாகவே இருக்கவேண்டும்.


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே ஓர் பெரிய படிப்பினையை நமக்கு தந்தது மட்டுமில்லாமல் எதிர்காலத்தையும், வரப்போகின்ற சமுதாயத்திற்கும் நாம் எப்படியான ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நம்மில் விதைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஓர் சர்வாதிகாரனாக உருப்பெற்ற ஒரு தலைவன் இந்த ஜனநாயக நாட்டிற்கு பொருத்தமற்றது என்பதை பல கட்சிகளும், மக்களும் சேர்ந்து ஓரங்கட்டியுள்ளோம். இருந்தும் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டு குடும்பத்தையும், சகாக்களையும், செய்த குற்றங்களையும் நீதிக்கு முன் நிறுத்தாமல் தடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் மீண்டும் உள் நுழைந்துள்ள நிலையில், நமது வாக்குகளை மிகச்சரியாக பயன்படுத்துவோம் என்றால் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தை சிறந்த நாட்டில் தொடரமுடியும்.

இங்கு கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், கடந்த காலத்தில் நமது சமூகத்திற்கு நடந்த கொடுமைகளையும், வேதனைகளையும் அறிந்துள்ள நம்மில் சிலர் இன்று வரைக்கும் எந்த தீங்கும் இழைக்கப்படவில்லை என்ற தொனியில், வாக்குகளை அநியாயக்காரர்களிற்கு வழங்கும்படி சொல்லித்திரியும் இவர்களின் மனங்களை அல்லாஹ்வே தூய்மையாக்க போதுமானவன்.
அநியாயக்கார கூட்டத்தை அடியோடு விரட்டுவதுடன் மட்டுமில்லாமல் மற்றைய காட்சிகளில் அரசியல் தஞ்சமடைந்து பதுங்கியுள்ள சில களைகளையும் நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கின்றோம். இந்த வேலையை சிறப்பாகச்செய்ய ஓர் சிறந்த எதிர்கட்சியையும் நாம் உருவாக்குவோமென்றால், அரசாங்கத்தின் குறைகளை நிவர்த்திசெய்து நாட்டிற்கும், மக்களிற்கும் ஓர் சிறப்பான வாழ்வாதாரத்தை நாமே ஏற்படுத்திக்கொள்ளலாம்.
நமது எண்ணங்கள் எல்லாம் இந்த இலங்கை நாட்டில் 10 விகிதமே உள்ள நாம் சிறுபான்மைச் சமூகம் என்று ஓரங்கட்டப்படாமல் சிறப்பான ஓர் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கமே அன்றி வேறில்லை. கட்சிகளின் கோர்பாடுகளுக்கிடையில் சிக்கி இருப்பதைவிட சிறந்த தெளிவான அரசியல் பிரமுகர்களை தெரிவுசெய்வது நன்மையளிக்கும்.

இத் தேர்தலின் முடிவுகள் ஓர் தேசிய அரசாங்கத்தினை நிறுவுவதற்கான தகைமைகளை கொண்டுள்ள நிலையில், அதற்கான ஆயத்தங்கலையே பிரதான கட்சிகள் இரண்டும் முன்னெடுத்துள்ளன என்பது தெளிவாகின்றது. இருந்தும் புதிய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி முன்னெடுப்பதற்கு பலமான அறிவு சார்ந்த ஓர் எதிர்க்கட்சி அவசியம். ஆக்கபூர்வமான விடயங்களை அலசி ஆய்வு செய்து முன்னிறுத்துவதற்கு இவர்களது பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகவே இருக்கும். இந்த முறையிலான ஓர் பாராளுமன்றத்தினை உருவாக்குவதற்கு நான் கருதுவது என்னவென்றால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாக்களிப்பதற்கு தகுதியானவர்களின் எண்ணிக்கையில் 2/3, 1/3 என்ற விகிதத்தில் நாமே முறையே நமது அரசாங்க உறுப்பினர்களையும், எதிர் கட்சி உறுப்பினர்களையும் தெரிவு செய்வோம் என்றால் இன்ஷா அல்லாஹ் அது நமது எதிர்காலத்தையே சிறப்பானதாக மாற்ற ஓர் படிக்கல்லாக அமையும் என்பது உறுதி.

Post a Comment

0 Comments