ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்க த்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
ரணில் விக்கிரமசிங்க இலங்கை யின் பிரதமராக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியினதும் சுதந்திரக்கட்சியின தும் பொதுச்செயலாளர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியினதும் சிறிலங்கா கட்சியினதும் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அந்த வகையில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணங்கியுள்ளது.
அதுமட்டுமன்றி அமைச்சு பதவிகளை பகிர்வதற்கும் ஒரு பொறிமுறை பிரேரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு பொறிமுறையின் அடிப்படையில் இரண்டு கட்சிகளுக்கிடையில் பகிரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு நேற்று முன்தினம் அங்கீகாரம் வழங்கியது. அத்துடன் இது தொடர்பில் ஆராய்ந்து யோசனை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் சுசில் பிரேமஜயந்த, அநுரபிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறிபால டி சில்வா, சரத் அமுனுகம உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.
இதேவேளை அமைச்சரவையை நான்கு துறைகளாக பிரித்து அவற்றின் அடிப்படையில் பொறிமுறைக்கு அமைய அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுதந்திரக்கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த செவ்வாய்க்கிழமையே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதன்போது தன்னுடைய அரசாங்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார். அத்துடன் தேசிய அரசாங்கத்தை அமைத்து முன்கொண்டு செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான சந்திப்பின்போது தேசிய அரசாங்கத்தை எவ்வாறு அமைப்பது என்பது தொடர்பாகவும விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே தற்போது தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு இரண்டு கட்சிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
பொது கருத்தொருமைமிக்க அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்ஙத புதன்கிழமை சகல அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றுபட்டு இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுப்போம் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்காக அரசாங்கத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைய வேண்டுமென்றும் பகிரங்கமாக வேண்டுகொள் விடுத்தார்.
தேர்தலுக்கு பின்னர் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் காலத்தில் கூறிவந்தார். அத்துடன் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இவ்வாறு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. ஐக்கிய தேசிய கட்சி கூடுதல் ஆசனங்களை பெற்றமையினால் ஆட்சியமைப்பதற்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக முடியும் என்பதால் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சிக்கே பிரதமர் பதவியை பெறுவதற்கும் ஆட்சியமைப்பதற்குமான உரிமை காணப்படுகின்றது. அதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முன்னிலையில் பிரதமராகவும் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும் பெற்றன. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தலா ஆசனத்தை கைப்பற்றின.
ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் மூன்றாவது சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

0 Comments