பிரதமர் பதவியின் உண்மையான உரிமையாளராக மஹிந்த ராஜபக் ஷவே காணப்படுகின்றார். எனவே, பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமிக்கவேண்டும் என்பதே எமது யோசனை என்பதுடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு உங்களையும் கோருகின்றோம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்டுள்ள ஏழு பேரில் ஆறு பேர் கையொப்பம் இட்டு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா ஜோன் செனவிரத்ன சமல் ராஜபக்ஷ அதாவுத செனவிரத்ன சுசில் பிரேம்ஜயந்த அநுரபிரியதர்சன யாப்பா ஆகியோர் ஜனாதிபதிக்கு இந்தத் கடிதத்தை அனுப்பியுள்ளனர். ஆனால் பிரதமர் பதவிக்கு பெயர் பரிந்துரைக்கப்பட்ட ஏ.எச்.எம். பெளசி இதில் கையொப்பம் இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நீங்கள் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்த தேர்தலை வழி நடத்திய மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்றோம். தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் இதனை கூறிவந்தோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறுவதற்கான பிரதான காரணியாக இது அமைந்துள்ளது.
பிரதமர் பதவிக்காக சுதந்திரக் கட்சியிலிருந்து சில சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்களை முன் மொழிந்துள்ளீர்கள். ஆனால் பிரதமர் பதவியின் உண்மையான உரிமையாளராக மஹிந்த ராஜபக்ஷவே காணப்படுகின்றார். இது கட்சியின் ஆதரவாளர்களினதும் எமதும் நிலைப்பாடாகும். எனவே பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரமதராக நியமிக்கவேண்டும் என்பதே எமது யோசனை என்பதுடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு உங்களையும் கோருகின்றோம்.
0 Comments