கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்களுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள பைரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமையின் போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் குழுவொன்று இன்று புதுக்கடைப் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதன்போது, அங்கிருந்த பைரூஸ் ஹாஜியாரின் அலுவலகத்தைக் கடந்து செல்லும் போது இரு குழுக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவ்விடத்தைவிட்டும் சமாதானமாக சென்றுள்ளனர். மீண்டும் அவ்வழியால் வேட்பாளர் முஜிபுர்ரஹ்மானின் ஆதரவாளர்கள் திரும்பி வரும் போது பைரூஸ் ஹாஜியாரின் குழுவுடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த வாழைத்தோட்ட பொலிஸாரும், கொட்டாஞ்சேனைப் பொலிஸாரும் சம்பவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளனர்.
0 Comments