நாம் விதைத்ததை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்களானால் நாம் அறுவடை செய்திருப்போம் என நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு வியாக்கியானம் தெரிவித்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக, மக்களுக்கான எமது போராட்டம் பாராளுமன்றத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அதற்கு வெளியே எமக்கு பலம்பொருந்திய அரசியல் போராட்டத்திற்கான பலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பொதுத் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக இடம்பெற்றது. சில சில சம்பவங்கள் இடம்பெற்றாலும் பொதுவாக அமைதியான தேர்தல் நடைபெற்றது.
இதற்காக தேர்தல்கள் ஆணையாளர் உட்பட தேர்தல்கள் திணைக்கள ஊழியர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் திணைக்களம் உட்பட அரச அதிகாரிகள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதோடு எமக்கு வாக்களித்த வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில் சிறிய பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் இருந்த போதும் மக்களுக்காக குரல் கொடுத்தோம்.
நடந்து முடிந்த தேர்தலில் நாம் எதிர்பார்த்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத போதும் எமக்கு கிடைத்துள்ள எம்.பி. பதவிகளை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பயன்படுத்துவோம். தற்போதைய சூழ்நிலையில் கூட்டரசாங்கமே அமையப் போகின்றது. இந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக நாம் இருக்க மாட்டோம்.
பாராளுமன்றத்திற்குள் எதிர்கட்சிக்குள்ள பொறுப்பை நிறைவேற்றுவோம். மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை வழங்கும் திட்டங்களை அரசு கொண்டு வந்தால் ஆதரிப்போம். இல்லாவிட்டால் எதிர்ப்போம். 19 ஆவது திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு சபையில் எமது பங்களிப்பை பெற முயற்சித்தால் அதற்கு எமது பங்களிப்பை வழங்குவோம்.
அதேவேளை செயற்குழுக்களில் அங்கம் வகிப்பதிலும் எமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எமது போராட்டம் வெறுமனே பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல.
அதற்கு வெளியே தொழிற்சங்கம் மாணவர் சங்கம் என பல்வேறு வடிவங்களில் எமக்கு பரந்துபட்ட அரசியல் பலம் உள்ளது. இப்பலத்தை நாம் பயன்படுத்துவோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி முறை தொடர்பில் எதுவிதமான பிரச்சினையும் தலை தூக்கவில்லை.
எனவே அது தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையும் இல்லை. நாம் விதைத்ததை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை எனவே எம்மால் அறுவடை செய்ய முடியாமல் போனது. உண்மையை மக்கள் புரிந்து கொள்ளவார்கள் அப்போது நாம் விதைத்ததை அறுவடை செய்வோம் என்றும் அநுர குமார திஸாநாயக தெரிவித்தார்.

0 Comments