Subscribe Us

header ads

வேலைக்கு போகும் அம்மாக்களால் பொம்மைகளோடு பொழுதை கழிக்கும் குழந்தைகள்


‘நாமிருவர் நமக்கு இருவர்’ என்ற காலம் மலையேறி ‘நாம் இருவர், நமக்கொருவர்’ என்ற நிலை இருந்து வருகிறது. அதுவும் காலப்போக்கில் மெல்ல மாறி ‘நாமிருவர் நமக்கெதற்கு இன்னொருவர், ‘நாமே குழந்தை நமக்கேன் இன்னொரு குழந்தை’ என்ற நிலை ஏற்படலாம். மேற்கண்ட வாசகங்கள் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கூறப்படுபவைகளாக இருந்தாலும், இன்றைய வாழ்க்கை சூழலோடும் மக்கள் அதை பொருத்திப்பார்க்கிறார்கள். 


மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பற்றியே தொடர்ந்து பேசி வருவதால், ‘குழந்தை பெற்றுக்கொண்டுதான் ஆகவேண்டுமா?’ என்ற கோணத்தில் சிந்திப்பவர்களும் உருவாகிவிட்டார்கள். அதுவும் உத்தியோகம் என்பது பெண்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்து கொடுக்கும் அஸ்திரமாக மாறிய நிலையில் அவர்கள் திருமணத்தையே தள்ளி வைத்து விடுகிறார்கள். சுயமாக சம்பாதித்து வாழும் பெண்களில் பலர் திருமணத்தை பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை. 

காலத்தின் கட்டாயத்தில் திருமணம் செய்து கொண்டாலும் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொண்ட பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று குழந்தை பேற்றை ஒதுக்கிவைக்கிறார்கள். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைந்த போதிலும் இன்னும் சில காலம் சுதந்திரமாக வாழலாம் என்று குழந்தை பிறப்பை தள்ளிவைப்பவர்களும் இருக்கிறார்கள். சில காலத்துக்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கும்போது அவர்களுடைய வயது கடந்துவிடுகிறது. 

அதனால் குழந்தை பிறப்பில் பல சிக்கல்கள் உருவாகிவிடுகிறது. அப்படிப்பட்ட சூழலில் குழந்தை தேவைதானா? என்றும் சில பெண்கள் நினைத்து விடுகிறார்கள். இது ஒருபுறமிருக்க, ‘குழந்தை வளர்ப்பு என்பது ஒரு உணர்வு பூர்வமான கடமை. தான் பார்க்கும் உத்தியோகம் அந்த கடமையை நிறைவேற்ற தடைக்கல்லாக அமைந்துவிடுமோ?’ என்ற கவலையும் பல பெண்களிடத்தில் எழுந்திருக்கிறது. அதற்கு ஏற்பத்தான் பல தாய்மார்களுடைய வாழ்க்கை சூழலும் அமைந்திருக்கிறது. 

அவர்கள் சம்பாதிக்கும் இயந்திரங்கள்போல் இயங்குகிறார்கள். குழந்தைகளோடு கழிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. காலையில் பரபரப்புடன் வேலைக்கு கிளம்பி சென்று இரவில் களைப்புடன் வீடு திரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குழந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்த்து மனம் விட்டு பேசக்கூட அவகாசம் இருப்பதில்லை. அதனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் பொம்மைகளோடு பொழுதை கழிக்கின்றன. கம்ப்யூட்டரிலே மூழ்கி கனவு காண்கின்றன. 

முன்காலத்தில் குழந்தை இல்லாததால் பல பெண்கள் இல்லற வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். திருமணமாகி குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் குழந்தைபேறு இல்லாவிட்டால் கணவன் இரண்டாவது திருமணத்துக்கு ஆசைப்படுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் பல பெண்களின் குடும்ப வாழ்க்கை பாதியிலேயே முடிந்தது. இன்றைய நிலைமை அப்படி இல்லை. உத்தியோகத்தில் இருக்கும் சில பெண்கள் தங்கள் கடமைக்கு தடையாக மாறக்கூடாது என்று குழந்தை இல்லாமலேயே காலத்தை தள்ளிவிடும் மனநிலைக்கு மாறிவிட்டார்கள். 

அவர்கள் குழந்தையின்மையை ஒரு குறையாக நினைப்பதில்லை. சிலர் குழந்தை தேவையில்லை என்று முடிவு செய்து சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறார்கள். மேலை நாடுகளில் இந்த நிலை பெருகி வருகிறது. அங்கு ஒரு பெண் காதலிக்க தொடங்கி, கல்யாணத்தை நோக்கி நகரும்போது, ‘குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறதா? இல்லையா?’ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அந்த முடிவுக்கு தக்கபடிதான் அந்த ஜோடி திருமணம் செய்துகொள்வார்களா? அல்லது திருமணம் செய்துகொள்ளாமலே வாழப்போகிறார்களா? என்பது தெரியவரும். 

பெண், குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்தால், அவள் அதை ஏற்றுக்கொள்ளும் நபரை திருமணம் செய்துகொள்கிறாள். குழந்தைக்கு தந்தையாக விரும்பாத ஆண் என்றால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமலே பிரிந்துவிடுகிறார்கள்.   குழந்தை தேவையில்லை என்ற முடிவிற்கு வர பல காரணங்கள் இருக்கலாம். உடல்நிலை குறைபாடு, குடும்ப சூழ்நிலை, நிதி நிலைமை, பார்த்துக்கொண்டிருக்கும் உத்தியோகம் இப்படி பல விஷயங்கள் இருக்கலாம். 

முன்பெல்லாம் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட பலர் சுதந்திரத்திற்காக திருமணத்தை தள்ளிப்போட்டனர். சிலர் கடைசி வரை திருமணமே செய்து கொள்ள வில்லை. அவர்கள் சுதந்திர போராட்டத்தை தங்கள் வாழ்நாள் கடமையாகவே பாவித்தனர். தற்போது பெண்கள்  குழந்தை பேற்றை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் வருமானம்.  திருமணமும், குழந்தையும் செலவினங்களை கொண்டது என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்தியா மக்கள் தொகை அதிகமுடைய நாடுதான் என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள தடை ஏதும் இல்லை. 

திருமணமும், குழந்தைப் பேறும் மங்களகரமான விஷயமாகவே இன்றும் கருதப்பட்டு வருகிறது. பெண்ணின் வாழ்க்கையில் அந்த தருணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பாவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் அதை ஒரு சுமையாக பலரும் நினைக்கிறார்கள். அவரவர் விருப்பப்படி வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒருசில முடிவுகளை எதிர்கால நலன் கருதி எடுக்கவேண்டியதிருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு குழந்தைகளால் மட்டுமே உருவாகிறது. 

ஒரு குழந்தை கூட இல்லாமல் கணவன்– மனைவி இருவர் மட்டுமே குடும்பம் ஆகிவிட முடியாது. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நிதி நிலைமை, பதவி, அந்தஸ்து இதெல்லாம் மட்டும் வாழ்க்கை ஆகிவிடாது. இவற்றுக்கெல்லாம் மேலாக சமூக பாதுகாப்பு என்ற ஒன்று இருக்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பின் மூலமே அந்த சமூக பாதுகாப்பை அடைய முடியும். குழந்தை இல்லாவிட்டால் காலம் கடந்த நிலையில் நம்முடைய பாதுகாப்பை நாமே இழந்து விடுகிறோம். 

நமக்கு மட்டுமல்ல நம்முடைய உடைமைகளுக்கும், சேர்த்து வைத்திருக்கும் பொருட்களுக்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும். குழந்தை இல்லாத பெண்கள் மங்கள நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள தடையாக இருந்த காலம் மெல்ல மாறி வருகிறது. இப்போது ஒருவர் விஷயத்தில் மற்றவர் அதிகமாக தலையிடுவது இல்லை.

ஆனாலும் குழந்தையின்மை என்பது இப்போதும் சமூகத்தில் ஒரு குறையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒருவருடைய திருமண வாழ்க்கை என்பது அவரவர் சொந்த விஷயம் என்ற போதிலும், ஒரு குழந்தைகூட இல்லாத திருமண வாழ்க்கையை வெற்றிகரமான வாழ்க்கையாக சமூகம் அங்கீகரிப்பதில்லை. இன்று எடுக்கும் முடிவுகள் இன்றைக்கு வசதியாக, லாபகரமானதாக இருக்கலாம். ஆனால் நாளை அதுவே பெரும் பிரச்சினையாக மாறிவிடக்கூடும்.

தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய

Post a Comment

0 Comments