ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளும் இணைந்து புதிய முன்னணி அமைப்பதற்கு இதுவரையில் காத்திரமான பேச்சுவார்த்தைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லையென அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மாற்று தேசிய முன்னணி அமைக்கும் நடவடிக்கைக்கான அடித்தளம் போடப்பட்டுள்ளதாகவும், ஏனைய கட்சிகளுடன் இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய அரசாங்கம் தொடர்பாக அதிருப்தியிலுள்ள ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக இடது சாரிக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளதாக லங்க சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண கூறியுள்ளார்.
பாராளுமன்றம் கூடியதன் பின்னர் உள்ள நிலைமையை வைத்து எதிர்க் கட்சி தொடர்பில் தீர்மானத்துக்கு வரவுள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மேற்படி கட்சிகளின் கருத்துக்களை அவதானிக்கும்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள கட்சிகள் எதிர்க் கட்சி அமைப்பது தொடர்பில் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்க வில்லை என்பது வெளிப்படையாகும் எனவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
0 Comments