முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அல்லது அமைச்சராக நியமிக்கவுள்ளது தொடர்பான தகவல்கள் தவறானவை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று அவரிடம் கருத்து வினவியுள்ளது. அதற்குப் பதிலளித்துள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாகவோ, அமைச்சுப் பதவி தொடர்பாகவோ யாரும் இதுவரை சமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவில்லை. அது தொடர்பான அனைத்து தகவல்களும் ஆதாரமற்றவை.
இது தொடர்பில் நான் சமல் ராஜபக்ஷவை தொடர்பு கொண்டு விசாரித்தேன். தனக்கு அவ்வாறான தகவல்களை யாரும் அறிவிக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளது. என்ன நடக்கப் போகின்றது என்பதை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
எமது கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதில் விருப்பம் கொண்டுள்ளனர். ஆனால் இது தொடர்பிலும் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்நதும் தெரிவித்துள்ளார்.
0 Comments