Subscribe Us

header ads

4 ஆயிரம் அகதிகளுக்கு அறுசுவை விருந்து படைத்து திருமணம் செய்து கொண்ட நல்ல உள்ளங்கள்



துருக்கி நாட்டை சேர்ந்த மணமக்கள், சிரியா-துருக்கி நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் அகதிகளாக தங்கியிருக்கும் சுமார் 4 ஆயிரம் சிரியா அகதிகளுக்கு அறுசுவை விருந்து படைத்து திருமணம் செய்து கொண்ட செய்தி மேற்கத்திய ஊடகங்களின் வெகுவான பாராட்டுகளை பெற்றுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக சில ஆண்டுகளாக போராட்டம் நடத்திய பொதுமக்களுக்கு எதிராக அரசுப் படைகளையும், ஆதரவாளர்களையும் ஏவிவிட்டு ஆட்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பயந்து அந்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளான துருக்கி, ஜோர்டான், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

சிரியா-துருக்கி எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள முகாம்களில் மட்டும் ஆயிரக்கணக்கான சிரியா மக்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்துவரும் இவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க துருக்கி நாட்டை சேர்ந்த மணமக்கள் முடிவு செய்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இவர்களது திருமண விழாவுக்கு விருந்தாளிகளாக சுமார் 4 ஆயிரம் அகதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். திருமண சடங்கு-சம்பிரதாயங்களை நிறைவேற்றிய ஃபெத்துல்லா உஸும்கோக்லு-எஸ்ரா போலாட் தம்பதியர், தங்களது கரங்களினால் அத்தனை அகதிகளுக்கும் விருந்து பரிமாறி, இன்புற்று மகிழ்ந்தனர்.

இந்த அரிய மகிழ்ச்சியை நிருபர்களுடன் பரிமாறிக் கொண்ட மணமகன் ஃபெத்துல்லா உஸும்கோக்லு, 'இதைப்போன்ற ஒரு புல்லரிப்பான தருணத்தை எனது வாழ்நாளில் அனுபவித்தது இல்லை. எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் இதுதான்' என்று பூரிப்புடன் தெரிவித்தார். 

இங்குள்ள சிரியா குழந்தைகளின் கண்களில் காணப்பட்ட மகிழ்ச்சி விலைமதிப்பில்லாதது. மகிழ்ச்சிகரமான இல்லற பயணத்தை தொடங்கும் முன்னர் இவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மிகவும் உன்னதமான ஒரு உணர்வாக அமைந்திருந்தது.

எங்களைப் பார்த்த பின்னர், தங்களது திருமணத்தின்போதும் இதேப்போல் அகதிகளை வரவழைத்து விருந்து படைக்க தீர்மானித்துள்ளதாக எங்கள் நண்பர்கள் உறுதியளித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த யோசனையை தெரிவித்த தனது தந்தைக்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments