Subscribe Us

header ads

வில்பத்து வில்லங்கம்..!

(ஏ.எல்.நிப்றாஸ்)


மனி­தனின் தேவைக்­காக படைக்­க­ப்பட்ட ஜீவ­ரா­சி­க­ளுக்கு இருக்­கின்ற மதிப்பும் மரி­யா­தையும் கூட இறை­வனின் உய­ரிய படைப்­பான மனி­த­னுக்கு இல்­லாமல் போய்க் கொண்­டி­ருப்­பதை காண்­கின்றோம். வனப் பாது­காப்பு என்ற பெயரில் சில மிரு­கங்­க­ளுக்­கா­கவும் வனாதரத்­திற்­கா­கவும், ஒரு இனக் குழு­மத்தின் இருப்பும் தார்­மீக உரி­மையும் மறுக்­கப்­ப­டு­கின்­றது.
இந்த போராட்­டத்தில் - மிரு­கங்கள் மிரு­கங்­களின் பக்கம் நிற்­கின்­றன, மனி­தர்கள் மனி­தத்தின் பக்கம் நிற்­கின்­றனர்.
உலக வர­லாற்றில் பல நக­ரங்கள், தீவுகள் இருந்த இடம் தெரி­யாமல் அழி­வ­டைந்து போயி­ருக்­கின்­றன. இலங்­கையில் வியா­பித்­தி­ருந்த யுத்­தமும் பல குக்­கி­ரா­மங்­களை அடை­யாளம் தெரி­யாமல் சிதை­வ­டையச் செய்­தி­ருக்­கின்­றது. முசலி மற்றும் அத­னை­யண்­டிய மீள்­கு­டி­யேற்ற பிர­தேச மக்­களின் வாழ்வும் அப்­ப­டித்தான் ஆகிப்­போ­னது. முன்னர் ஆயு­தத்தை காட்டி விரட்­டப்­பட்­ட­வர்­களை இன்று சட்­டத்தை காட்டி விரட்டும் அபாயம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
நாட்டில் நல்­லாட்சி ஏற்­பட்ட பிறகு முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள மிக முக்­கிய பிரச்­சி­னை­யாக இது காணப்­ப­டு­கின்­றது. குர­லற்ற இந்த மக்­களின் குர­லாக அமைச்சர் றிசாட் பதி­யுதீன் செயற்­ப­டு­கின்றார். ஆனால் ஏனைய முஸ்லிம் தலை­மைகள் வாழா­வி­ருக்­கின்­றனர். ரோம் நகரம் எரிந்­த­போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்­டி­ருந்­ததை இங்கு நினை­வூட்­டு­வதா? அல்­லது எருமை மாட்டின் மீது மழை பெய்­வது போல என்று இதனை வர்­ணிப்­பதா என்று தெரி­ய­வில்லை.

வெளி­யேற்­றமும் மீள்­கு­டி­ய­மர்வும்

சமூகக் கல்­வியும் வர­லாறும் பாடத்தைப் போல வில்­பத்து சர­ணா­ல­யத்தை புவி­யியல் வரை­ப­டங்­க­ளோடு ஆராய்­வதை விடவும், சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள மக்­களின் வாழ்­விடம் பற்­றிய அடிப்­படை புரிதல் மிக அவ­சி­ய­மா­கின்­றது. வில்­பத்து சர­ணா­லயம் என்­பது ஐந்து சிறு காடு­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். புத்­த­ளத்­திற்கு வடக்­கா­கவும் அனு­ரா­த­பு­ரத்­திற்கு வட மேற்­கா­கவும் வடக்கு பெரு­நி­லப்­ப­ரப்பை ஊட­றுத்து வியா­பித்­தி­ருக்­கின்­றது. இந் நிலப்­ப­ரப்பு. இதனைச் சூழ­வுள்ள ஒரு கிலோ­மீற்றர் இடப்­ப­ரப்பு பாது­காப்பு வல­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இப் பகு­தியில் இதற்கு முன்­னரும் இப்­போதும் கூட எவ்­வித மக்கள் குடி­யேற்­றங்­களும் அமையப் பெற­வில்லை.

ஆனால் அதற்கு அப்­பா­லான முசலி, மறிச்­சுக்­கட்டி, பாவற்­குழி, காட்­டுக்­குழி என இன்னும் பல குக்­கி­ரா­மங்­களில் மக்கள் வாழை­யடி வாழை­யாக வாழ்­கின்­றனர்.


இவர்­களுள் ஒரு தொகு­தி­யினர் யுத்­தத்­தினால் இடம்­பெ­யர்ந்து கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் மீள குடி­யே­றி­ய­வர்கள். இம் மக்கள் குடி­யே­றிய இடத்­தில்தான் சட்­டமும் பேரி­ன­வா­தமும் இப்­போது கண் வைத்­தி­ருக்­கின்­றன. பாது­காக்­கப்­பட்ட வனப்­ப­கு­தியை அழித்து மக்கள் அங்கு சட்ட விரோ­த­மாக குடி­யேற்­றப்­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அப்­பாவி மக்­களை அங்­கி­ருந்து வெளி­யேற்­று­வது அவர்­க­ளது இறுதி இலக்­காக இருக்­கின்­றது.

புலிகள் முஸ்­லிம்­க­ளுக்கு மிகப் பெரிய அநி­யா­யங்­களைச் செய்­தி­ருக்­கின்­றார்கள். யார் என்ன சொன்­னாலும் இதை மறுப்­ப­தற்­கில்லை. அதில் மிக முக்­கி­ய­மா­ன­துதான் வடக்கின் இனச் சுத்­தி­க­ரிப்பு. அது ஒரு கசப்­பான அனு­பவம் என்று புலி­களே ஒரு கட்­டத்தில் ஏற்றுக் கொள்­ளு­ம­ள­வுக்கு மிகக் கேவ­ல­மான ஒரு நட­வ­டிக்­கை­யாக இது அமைந்­தது. வடக்கின் பல பகு­தி­களில் இருந்து இர­வோ­டி­ர­வாக இரண்­டரை மணித்­தி­யால காலக்­கெ­டு­வுக்குள் கிட்­டத்­தட்ட 1 இலட்சம் முஸ்­லிம்கள் விரட்­டப்­பட்­டனர். இரண்டு பனடோல் குளி­சை­க­ளுக்கு அதி­க­மான மாத்­தி­ரை­களை கொண்டு செல்ல அவர்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. இரண்டு பாவா­டைகள் உடுத்திச் சென்ற முஸ்லிம் பெண்­களின் ஒரு பாவாடை உருவி எடுக்­கப்­பட்­ட­தாக எல்லாம் ஏகப்­பட்ட அரு­வ­ருக்­கத்­தக்க, சோகக் கதைகள் வடக்கு முஸ்­லிம்­க­ளிடம் இருக்­கின்­றன.
வில்­பத்து வனாந்­தரத்­திற்கு அந்­தப்­பக்­க­மாக குடி­யேறி இருக்­கின்ற மக்கள் இவ்­வாறு புலி­களால் விரட்­டப்­பட்­ட­வர்­கள்தான். 1990ஆம் ஆண்டு முச­லியை சூழ­வுள்ள தமது பூர்­வீக கிரா­மங்­களில் இருந்து 500 இற்கு மேற்­பட்ட குடும்­பங்கள் உடுத்த உடை­யுடன் புலி­களால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டன. தமது பிள்­ளை­க­ளையும் வயது முதிர்ந்­த­வர்­க­ளையும் சைக்­கிள்­க­ளிலும் உழவு இயந்­தி­ரங்­க­ளிலும் ஏற்றிக் கொண்டு புத்­த­ளத்தை அண்­டிய பிர­தே­சங்­களை நோக்கி அம் மக்கள் நகர்ந்­தனர். பலர் பல கிலோ­மீற்றர் தூரம் நடந்தே வந்­தனர். துப்­பாக்­கிகள் மீதான உயிர்ப்­பயம் அவர்­களை திக்குத் தெரி­யாத காட்டில் கூட்டி வந்து விட்­டது.

அன்று முதல் கிட்­டத்­தட்ட 20 வரு­டங்கள் அவர்­க­ளது வாழ்க்கை அகதி முகாம்­க­ளிலும் அடைக்­க­ல­ம­ளித்­தோரின் கொல்லைப் புறங்­க­ளி­லுமே கழிந்­தது. தமி­ழீழம் கேட்டுப் போரி­டாத அதே­நேரம் தமி­ழர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்த ஒரு சமூகம் அநி­யா­ய­மாக வஞ்­சிக்­கப்­பட்­டது. இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்கள் போர் நிறுத்த உடன்­ப­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்ட காலத்தில் முசலி பகு­திக்கு சென்று தமது சொந்த இடங்­களை பார்­வை­யிட்ட போதும் அவ்­வு­டன்­ப­டிக்கை மீறப்­பட்டு யுத்தம் மீண்டும் தொடர்ந்­ததால் மீள்­கு­டி­யேற்றம் இடம்­பெ­ற­வில்லை.

இப்­ப­டி­யாக சொந்த நாட்­டுக்­குள்­ளேயே நாடோ­டி­களைப் போல் வாழ்ந்த மக்­களை மீளக் குடி­யேற்­று­வ­தற்­கான சாத்­திய சூழல் யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரே ஏற்­பட்­டது. அதன்­படி அப்­போ­தைய அர­சாங்­கத்தின் பலம்­பொ­ருந்­திய அமைச்­ச­ராக இருந்த பஷில் ராஜபக் ஷவின் மேற்­பார்­வையின் கீழ் ஜனா­தி­பதி மஹிந்­தவின் பூரண சம்­ம­தத்­து­ட­னேயே முசலி மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் பெரு­ம­ள­வி­லான முஸ்­லிம்­களும் சிறி­த­ளவு சிங்­க­ள­வர்­களும் குடி­யேற்­றப்­பட்­டனர். இப் பிர­தேசம் மீளக் குடி­யே­றிய மக்­களின் சொந்த மண் என்­பதில் இரு நிலைப்­பா­டுகள் இல்லை. அவர்கள் இலங்­கையில் அகதி வாழ்வை மிக அதிக காலம் அனு­ப­வித்த மக்கள் என்­றாலும் கூட அமைச்சர் றிசாட் பதி­யு­தீனோ அல்­லது வேறு யாரோ லொறி­களில் ஏற்­றி­வந்து திடு­தி­டுப்­பென குடி­ய­மர்த்­த­வில்லை.
மாறாக, இதற்­காக ஜனா­தி­பதி செய­லணி அமைக்­கப்­பட்டு சட்ட முறைப்­ப­டியே குடி­யேற்றம் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. இந்த செய­ல­ணியில் வன­ப­ரி­பா­லன திணைக்­களம், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம், சுற்­றாடல் அதி­கார சபை, சுற்­றாடல் அமைச்சு, மாவட்ட செய­லாளர், பிர­தேச செய­லாளர் உள்­ள­டங்­க­லாக மிக உயர்­மட்ட அதி­கா­ரிகள் அங்கம் வகித்­தி­ருக்­கின்­றார்கள். இன­வாதம் கொடி­கட்டிப் பறந்த காலத்தில் மஹிந்த அர­சாங்கம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு சலு­கை­களை கொடுத்தோ, அல்­லது சட்­டத்தை மீறியோ குடி­யேற்­றி­யி­ருக்கும் என்று யாரா­வது சொன்னால் அது முட்­டாள்­த­ன­மா­னது.எனவே அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யுடன் மக்­களால் புதர்கள் வெட்­டப்­பட்டு குடி­யேற்றம் இடம்­பெற்­றது. இவ்­வாறு குடி­யேற்­றப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு அரை ஏக்கர் காணியும் கற்கள் மற்றும் தக­ரத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இடம்­பெயர் காலத்தில் மூன்று தலை­மு­றை­க­ளாக பெரு­கி­விட்ட இம்­மக்­க­ளுக்கு இவ்­வ­ச­திகள் போதாது என்ற போதும், தமது சொந்த இடத்தில் மீள் குடி­யே­று­கின்றோம் என்ற ஒரே ஆறு­த­லுக்­காக கிடைத்­ததை போது­மாக்கிக் கொண்­டார்கள்.
மூக்கை நுழைக்கும் இன­வாதம்

ஆனால் சிலர் இப்­போது ஒரு புதுக்­கதை கூறு­கின்­றனர். வில்­பத்து சர­ணா­ல­யத்­திற்கு உரித்­தான காடு­களை அழித்து சட்­ட­வி­ரோ­த­மான முறையில் முஸ்­லிம்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ள­தாக பேரி­ன­வாத சக்­திகள் கூக்­கு­ர­லிடத் தொடங்­கி­யுள்­ளன. மஹிந்த ஆட்­சியில், சொல்­வதை செய்யும் எடு­பி­டி­க­ளாக இருந்த சில அதி­கா­ரி­க­ளுக்கும் இப்­போது கொம்பு முளைத்­தி­ருக்­கின்­றது. தமக்கு சாத­க­மான பழைய ஆதா­ரங்கள், வர்த்­த­மானப் பத்­தி­ரி­கைகள், வரை­ப­டங்­களை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்­தி­ருக்­கின்­றனர். அமைச்சர் றிசாட்டை கைது செய்­யா­விட்டால் சாகும் வரை உண்­ணா­வி­ர­தத்தில் குதிக்­கப்­போ­வ­தாக ராவண பலய அறி­விக்கும் அள­வுக்கு நிலைமை முற்­றி­யி­ருக்­கின்­றது.

முதன் முத­லாக இது பற்றி மக்கள் விடு­தலை முன்­ன­ணியே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தது. உடனே இது விட­யத்தில் அக்­கறை செலுத்­திய ஜனா­தி­பதி இதனை தடுத்து நிறுத்­து­மாறு உத்­த­ர­விட்டார். அப்­பாவி முஸ்­லிம்­களின் குடி­ய­மர்வு தொடர்பில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஜனா­தி­பதி முதன்­மு­த­லாக பாவித்­தி­ருக்­கின்றார் என்­பது இங்கு கவ­னிப்­பிற்­கு­ரி­யது. ஆனால் இதில் ஒரு நேர்மை இருந்­தது. சட்­டப்­படி இது கையா­ளப்­படும் என்ற நம்­பிக்­கையும் இருந்­தது.
ஆயினும் இன­வாத சக்­திகள் இதை கையில் எடுத்­த­துதான் வேறு ஒரு கோணத்தில் இவ்­வி­வ­கா­ரத்தை நகர்த்­தி­யி­ருக்­கின்­றது. இதனால் வட­புல முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மன்றி ஏனைய முஸ்­லிம்­க­ளுக்கும் மன­துக்குள் ஏதோ ஒரு இனம்­பு­ரி­யாத உணர்வு ஏற்­பட்­டுள்­ளதை மறுக்­க­வி­ய­லாது. கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் ராவண பல­யவின் பிக்­குகள் குழு­வொன்று இப்­பி­ர­தே­சத்­திற்கு விஜயம் செய்து தங்­க­ளுக்குள் ஏதேதோ பேசி­விட்டு சென்­றி­ருக்­கின்­றது. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் வில்­பத்து மறிச்­சுக்­கட்டி பிர­தே­சத்­திற்கு பொது­ப­ல­சேனா பிக்­குகள் சிலர் அதி­ர­டி­யாக வந்து போனதை இது ஞாப­கப்­ப­டுத்­து­கின்­றது.
சட்­டத்­திற்கு கட்­டுப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மா­னது. அது விட­யத்தில் தவ­றுகள் விடப்­பட்­டி­ருந்தால் அவை மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் திருத்­தப்­பட வேண்டும் என்­பதில் மாறு­பட்ட கருத்­துக்கள் இல்லை. ஆனால், கடும்­போக்கு பௌத்த தேரர்­களும் இன­வாத அமைப்­புக்­களும் இதில் மூக்கை நுழைப்­பதும் சட்­டத்தை கையில் எடுப்­பதும் அவர்­க­ளுக்கு தேவை­யில்­லாத வேலை. இந்த நாட்டில் வடக்­கிலும், கிழக்­கிலும் ஏன் கொழும்­பிலும் கூட பல மூவின மக்­களும் கொல்­லப்­பட்ட போது அனு­தா­பப்­ப­டாத இந்த கடும்­போக்­கு­வா­திகள், இப்­போது வில்­பத்து சர­ணா­ல­யத்தை பாது­காக்க முற்­ப­டு­வது வனாந்­த­ரத்­தின்­மீதும் வன ஜீவ­ரா­சிகள் மீதும் கொண்ட காருண்­யத்தால் மட்­டும்­தானா என்ற கேள்வி பல உப கேள்­வி­களைக் கொண்­டது.

வில்­பத்­திற்கு அப்பால் குடி­யேற்­றப்­பட்ட மக்கள் வந்­தேறு குடி­க­ளல்ல. சிலர் கதை­ய­ளப்­பது போல பாகிஸ்­தானில் இருந்து வந்த யாரும் அங்கு குடி­யேற்­றப்­ப­ட­வு­மில்லை. அந்த மண்ணில் 1990ஆம் ஆண்டு வரை நல்ல செல்வச் செழிப்­போடு அவர்கள் வாழ்ந்­த­தற்­கான ஏகப்­பட்ட சான்­று­களை அங்கு காணலாம். பள்­ளி­வாசல், சேத­ம­டைந்த வீடுகள், கல்­வெட்­டுக்கள் என்று அவர்­க­ளது எச்­சங்கள் சாட்­சி­யங்­க­ளாக இருக்­கின்­றன. அந்த இடத்­தில்தான் இப்­போது மீளக் குடி­யேறி இருக்­கின்­றார்கள். எனது கணிப்­பின்­படி, இப் பிர­தே­சங்­களில் இருந்து புலி­க­ளுக்கு பயந்து 90ஆம் ஆண்டு மக்கள் வெளி­யே­றி­விட்­டார்கள் என்றால், பல வரு­டங்­க­ளாக இப்­ப­கு­தியில் அரச பொறி­முறை சரி­யாக இயங்­கி­யி­ருக்க வாய்ப்­பில்லை. புலி­களின் நட­மாட்­ட­மா­னது வன­ப­ரி­பா­லன அதி­கா­ரி­களை அப்­ப­கு­திக்கு வர­வி­டாது தடுத்­தி­ருக்கும். பாது­காப்பு அரண்­க­ளுக்கு வெளியில் நின்று கொண்­டுதான் காடு­களை பரா­ம­ரித்­தி­ருக்­கவும் கூடும். இக் காலப்­ப­கு­தியில் (அதா­வது 20 வரு­டங்­களில்) குடி­யி­ருப்பு பிர­தே­சங்­களில் காடுகள் வளர்ந்து, ஊர்­களும் காடுகள் போல மாறி­யி­ருக்க நிறைய சாத்­தி­ய­மி­ருந்­தது என்­பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்­போது ஊரும் காடும் கலந்­தி­ருந்த நிலையில் தமது ஊருக்குள் இருந்த காடு­களை வெட்­டியே மக்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். 25 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரான நில அமைவு பற்றி தெரிந்­தி­ருக்­காத எந்த ஒரு நப­ருக்கும் இது வன­அ­ழிப்பு போலவே தோன்றும். ஆனால் நடந்­தது என்­ன­வென்று தெரி­யாமல் சத்­தம்­போடக் கூடாது.இந்த மக்கள் முன்னர் அங்கு வாழ்ந்­தி­ருக்­கின்­றார்கள். அர­சாங்­கத்தின் கொள்­கை­க­ளையும் சட்­டத்­தையும் அனு­ச­ரித்து சட்­ட­மு­றைப்­படி இப்­போது மீள குடி­யேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இச் செய­ல­ணிக்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் பசில் மற்றும் மாவட்ட செய­லாளர் உள்­ளிட்ட பொறுப்­பு­வாய்ந்த பலர் இது முறை­யான குடி­யேற்றம் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றார்கள். சட்­டத்­தி­னதும் காடு­க­ளி­னதும் காவ­லர்­க­ளுக்கு இதற்­கப்பால் என்ன வேண்டும்?

யார் குற்­ற­வா­ளிகள்?

மீள் குடி­யேற்றம் பற்­றிய சர்­வ­தேச அழுத்தம் வலு­வ­டைந்­தி­ருந்த காலப்­ப­கு­தியில் இம் மீள்­கு­டி­யேற்றம் மேற்­கொள்­ளப்­பட்­டது. என்­றாலும் வில்­பத்து பாது­காக்­கப்­பட்ட நிலப்­ப­கு­திக்­குள்ளோ அல்­லது பாது­காப்பு வல­யத்­திற்­குள்ளோ ஒரு குடும்­ப­மேனும் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை என்றும் ஒரு அங்­குல காடேனும் அழிக்­கப்­பட்டு மக்கள் மீள் குடி­யேற்றம் செய்­யப்­ப­ட­வில்லை என்று அடித்துக் கூறு­கின்றார் அமைச்சர் றிசாட்.. அது­மட்­டு­மன்றி இங்­குள்ள மக்­க­ளுக்கு காணி உறு­தி­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்று ஆதா­ரங்­களை அள்ளி வீசு­கின்­றார் அவர். இது வில்­பத்து சர­ணா­லயம் அல்ல கல்­லாறு காடுகள் என்றே அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்றோம் என வன­ப­ரி­பா­லன அதி­காரி ஒரு­வரும் தொலைக்­காட்­சியில் கூறினார்.

உண்­மைகள் இவ்­வா­றி­ருக்க இன­வாத சக்­தி­களும் கடும்­போக்கு பிக்­கு­களும் நாட்டில் முஸ்­லிம்­களை தூண்டி மீண்­டு­மொரு அமை­தி­யற்ற நிலையை தோற்­று­விக்க முயற்­சிக்­கின்­றனர். ஓரிரு ஊட­கங்கள் இதற்­காக திரை­ம­றைவு கொந்­த­ராத்­துக்­கா­ரர்கள் போல செயற்­ப­டு­வ­தாக முஸ்­லிம்­க­ளி­டையே பர­வ­லாக பேசப்­ப­டு­கின்­றது.
சரி - அவர்­களின் வழிக்கே வந்­தாலும், இலங்­கையில் இதற்கு முன்னர் எந்­த­வொரு காடும் அழிக்­கப்­ப­ட­வில்லை என்­பது போலல்­லவா இவர்கள் நடந்து கொள்­கின்­றார்கள். மக்­க­ளுக்­கா­கத்தான் மற்­றைய வளங்கள் எல்லாம் இறை­வனால் படைக்­கப்­பட்­டுள்­ளன என்ற அடிப்­ப­டையில் பல குடி­யேற்­றங்கள், மீள்­கு­டி­ய­மர்வு வேலைத்­திட்­டங்கள் இதற்கு முன்­னரும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சுவர்­ண­பூமி, ஜய­பூமி காணி உறு­திகள் வழங்­கப்­பட்­டன.உண்­மையில் சட்­டத்தை சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் வன­ஜீ­வ­ரா­சிகள் , வன­ப­ரி­பா­லன துறை அதி­கா­ரி­க­ளுக்கும் ஜே.வி.பி., ராவண பலய போன்­ற­வற்­றுக்கும் அக்­கறை இருந்­தி­ருக்­கு­மானால், இந்த மீள் குடி­யேற்றம் இடம்­பெற்ற வேளையில் அவர்கள் என்ன நித்­தி­ரையில் இருந்­தார்­களா? உட­ன­டி­யாக களத்தில் இறங்கி மீள் குடி­யேற்­றத்தை தடுத்து நிறுத்­தி­யி­ருக்­க­லாம்­தானே. அவ்­வாறு செய்­தி­ருந்தால் அதற்­கான மாற்று தீர்வை அப்­போதே தேடி­யி­ருக்­கலாம். ஆனால் அதைச் செய்­ய­வில்லை. மஹிந்த அரசில் வாயைத் திறந்தால் உள்ளே போட்­டு­வி­டு­வார்கள் என்ற பயத்தில் ஒன்றும் பேசாமல் இருந்­த­தாக அவர்கள் சொல்ல வரு­கின்­றார்­களா?

சட்ட விரோத குடி­யேற்றம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் இதற்­காக அமைச்சர் றிசாட்டை மட்டும் கைது செய்ய முடி­யாது. ஜனா­தி­பதி செய­ல­ணியின் உறுப்­பி­னர்கள், அப்­போதை வன­ப­ரி­பா­லன திணைக்­கள உய­ர­தி­கா­ரிகள், சுற்­றாடல் பாது­காப்பு அதி­கார சபையின் பணிப்­பாளர், முப்­படை அதி­கா­ரிகள், கணக்­கெ­டு­ப்பு நடத்­தியோர் மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­பக் ஷ உள்­ள­டங்­க­லாக நூற்­றுக்கு மேற்­பட்டோர் கைது செய்­யப்­பட வேண்டும். குறிப்­பாக தமது வேலையைச் செய்­யாமல் பார்த்துக் கொண்­டி­ருந்­து­விட்டு இன்று சட்டம் பேசும் அதி­கா­ரிகள் ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
இந்த நாட்டில் சட்­ட­வி­ரோ­த­மாக குடி­யேற்­றப்­பட்­ட­வர்கள் யாரென்று உல­க­றியும். வடக்கின் பல பிர­தே­சங்­களில் சிங்­களக் குடி­யேற்­றங்கள் திடீ­ரென முளைத்­தி­ருக்­கின்­றன. வடக்கு கிழக்­கி­லுள்ள பல பாரம்­ப­ரிய தமிழ், முஸ்லிம் பிர­தே­சங்­களின் பெயர்­களும் வர­லாறும் இர­வோ­டி­ர­வாக மாற்­றப்­பட்­டுள்­ளன. அம்­பா­றை­யிலும் வேறு பல இடங்­க­ளிலும் 1960களில் இருந்து அபி­வி­ருத்தி திட்டம் என்ற பெயரில் சிங்­கள குடி­யேற்­றங்­களை உரு­வாக்­கி­ய­வர்கள் யாரென்று சொல்லத் தேவை­யில்லை. இது­வெல்லாம் சட்­டத்தை பின்­பற்றி மேற்­கொள்­ளப்­பட்­டவை என்­பதைக் காட்­டிலும் அர­சியல் அதி­கா­ரத்தின் மூலம் செய்­யப்­பட்­டவை என்­பதே உண்­மை­யாகும். ஆனால் இது­வ­ரையும் எந்த சிங்­கள குடி­யேற்­றங்கள் இடம்­பெ­று­கின்­ற­போதும் வனப்­பா­து­காப்பு பற்றி பேசா­த­வர்கள் அல்­லது தமக்குள் பேசி காரி­யத்தை முடித்­த­வர்கள் இன்று முஸ்­லிம்கள் மீள் குடி­யே­றி­யதை மட்டும் பூதா­க­ர­மாக்க நினைப்­பது அவர்­க­ளது உள்­மனக் கிடக்­கை­களை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றது.
இவ்­வா­றான பிரச்­சினை ஒன்றில் வட­புல முஸ்­லிம்கள் சிக்­கித்­த­வித்துக் கொண்­டி­ருக்க அந்த மக்­களின் குர­லாக அமைச்சர் றிசாட் பதி­யுதீன் மட்­டுமே ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்றார். ஆங்­காங்கே அசாத் சாலி போன்ற ஓரி­ரு­வ­ரது அறிக்­கை­களும் வெ ளியா­கின்­றன. ஆனால் மற்­றைய முஸ்லிம் தலை­மைகள் வாயை திறந்­த­தாக கூட செய்­திகள் வர­வில்லை. இதை­விட முக்­கி­ய­மாக அவர்கள் என்­னதான் பிடுங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்? முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்­கீமோ, தேசிய காங்­கிரஸ் தலைவர் அதா­வுல்­லாவோ அல்­லது ஐக்­கிய ஆளும் கட்­சிக்குள் அங்கம் வகிக்­கின்ற ஏனைய அர­சி­யல்­வா­தி­களோ இது விட­யத்தில் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை ஆற்­ற­வில்லை என்றே கூற வேண்டும்.வடக்கு விவ­கா­ரத்தை றிசாட் மட்டுமே பார்த்துக் கொள்ளட்டும்.
அங்கு நமக்கு வாக்குகள் இல்லைதானே என்று ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. அல்லது மீள்குடியேற்றம் சட்டத்திற்கு முரணானது என்ற எண்ணத்தில் நீதியின் பக்கம் நிற்கப் பார்க்கின்றார்களோ தெரியாது. ஆனால், இது ஒரு தேர்தல் காலமாக இருந்திருந்தால் நிலைமைகள் வேறுமாதிரி இருந்திருக்கும். ஹக்கீம் வில்பத்து பற்றிப் பேசிப்பேசியே மேடைகளை அதிரவைத்திருப்பார். முஸ்லிம் அரசியல்வாதிகளின் அறிக்கைகளால் பத்திரிகைகள் நிறைந்திருக்கும். வில்பத்து வில்லங்கத்தை விற்று நிறைய வாக்கு சம்பாதித்திருப்பார்கள் நமது அரசியல் வியாபாரிகள். ஆனால் இது எதுவும் இப்போது நடக்கவில்லை.

இது வஞ்சிக்கப்பட்ட மக்களின் இருப்பு, வாழ்வாதாரம் பற்றிய பிரச்சினை. ஜனாதிபதி மைத்திரிபால கூறியிருப்பது போல இதனை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். வில்பத்துவுக்கு அருகில் அவசரமாக மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட வேளையில் சிறுசிறு தவறுகள் இடம்பெற்றிருக்கலாம் என்பது உண்மைதான். அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, இந்த சூட்சுமங்கள் எதையும் அறிந்திராத அப்பாவி பொது மக்களை பலிக்கடாவாக்க யாரும் முனையக்கூடாது. மனிதாபிமானம் கிடைக்காத பட்சத்தில் காலம் கடத்தாது நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்.முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள் - காடுகளா, வனஜீவராசிகளா, மனிதர்களா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments