மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை. மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டன. நவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டன. ஆனால் எந்தப் பயனும் இல்லை. ஒரு வருடமான நிலையில், விமானத்தின் சிதைவோ, பயணம் செய்தவர்களின் உடலோ எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments