Subscribe Us

header ads

பகிடிவதை: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்...

பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கச் சென்றிருக்கும் மாணவ மாணவிகள் பகிடிவதையால் படும் அவஸ்தை சிறைச்சாலைகளில் சிறைக் கைதிகள் படும் அவஸ்தையை விட கொடூரமானதோ என்று சந்தேகிக்கின்ற அளவு நிலமை படுமோசமாகி இருக்கிறது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலச் சென்ற ஹோமாகமையைச் சேர்ந்த எஸ் எஸ் அமாலி என்ற மாணவி பகிடிவதையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த மாணவி எழுதிய கடிதத்தில் தனது பூதவுடலை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு காட்ட வேண்டும் என்றும் இது போன்ற மரணங்கள் இனிமேல் நிகழாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாணவியை கொன்றவர்கள் யார்? இந்த மாணவி தற்கொலை தான் செய்திருக்கிறார். என்றாலும் இது உண்மையில் தற்கொலை அல்ல. இது ஒரு கொலை. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்தவர்கள் மட்டுமல்ல எங்கெல்லாம் யாரெல்லாம் பகிடிவதை செய்கின்றார்களோ அவர்கள் அனைவரும் இந்த கொலைக்கு பங்குதாரர்கள்.
அது மட்டுமல்லாமல் இது வரை காலமும் இலங்கையில் ஆங்காங்கே பகிடிவதை நடக்கிறது, இதனால் மாணவ மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்தும் “நமது பல்கலைக்கழகத்தில் அவ்வாறான பகிடிவதைகள் நடப்பதில்லை” என பொய்யான அறிவுப்புகளை செய்யும் பல்கலைக்கழக நிர்வாகிகளும் விரிவுரையாளர்களும் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
“யஹ பாலனை” யைப் பற்றிப் பேசும் புதிய அரசாங்கத்தில் இப்படியான நிகழ்வுகள் நடைபெறுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பகிடிவதை விவகாரத்திற்கு சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புதிய அரசாங்கத்திடம் இந்நாட்டு மக்கள் வினயமாக வேண்டி நிற்கின்றனர்.
இங்கே இன்னுமொரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பகிடிவதை புரிவது போன்றே முஸ்லிம் மாணவ மாணவிகளும் தங்களது ஜூனியர்ஸ்களுக்கு பகிடிவதை என்ற கொடுமையைப் புரிவது கசப்பான உண்மையாகும். முஸ்லிம்களின் எதிரிகள் முஸ்லிம்களைத் துன்புறுத்துவது மலையேறி முஸ்லிம்களே முஸ்லிம்களைத் துன்புறுத்தும் கொடுமை “பகிடிவதை” என்ற பெயரில் கல்வி கற்கச் செல்லும் இடங்களில் நடந்தேறுகிறது. அன்று அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற கல் நெஞ்சம் படைத்தவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகளை மறக்க முடியாது.
பிலால் (ரழி) அவர்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலை வன சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லைத் தூக்கி வைத்து வேதனை செய்யப்பட்டார்கள்.
இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியான சுமையா (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் என்பவன் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். நெஞ்சை உருக வைக்கும் இப்படியான வரலாறு இன்று வரை தொடர்கிறது. வேதனைக்குரிய விடயம் என்னவெனில் கல்வி கற்கச் சென்ற எமது முஸ்லிம் சகோதரர்களில் சிலர் ஜூனியர்ஸ் வந்தவுடன் அபூ ஜஹ்ல்களாக, உத்பாக்களாக, உமையாக்களாக, ஷைபாக்களாக உரு மாறுகின்றனர்.
இவர்கள் ஏழு வானங்களுக்கு மேலாலிருந்து நம்மை அவதானித்துக் கொண்டிருக்கும் நம்மைப் படைத்த அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நன்மையையும் தீமையையும் பதிய வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நியமிக்கப்பட்டுள்ள மலக்குமார்களை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்யப்பட்ட பதிவேடு வழங்கப்பட இருக்கும் மறுமை நாளையும் மறந்து விடக்கூடாது.
நாளை மறுமை நாளில் சுவர்க்கத்தை விட்டும் தூரமாகி நரகில் நுழைவிக்கப்பட இப்”பகிடிவதை” காரணமாக அமைந்து விடக்கூடாது. அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும். சீனியர்ஸ் ஜூனியர்ஸ்ஸை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக சில முறையற்ற கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் போட்டு வைத்திருப்பார்கள். அந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படும் போது அதனை சாட்டாக வைத்து துன்புறுத்துவாரகள்.
சீனியர்ஸ் போடும் சில முறையற்ற சட்டங்கள்.உதாரணத்திற்கு:
• சப்பாத்து போட வேண்டும். ஆனால் மேஸ் போடக் கூடாது
• ட்றவ்ஸர் போட வேண்டும். ஆனால் பெல்ட் போடக் கூடாது
• உள்ளங்கி போடக் கூடாது
• கைக்கடிகாரம் கட்டக் கூடாது
• விலை குறைந்த உணவு சாப்பிட வேண்டும்
• ஆங்கிலம் பேசக் கூடாது
• சீனியர்ஸ் வைக்கும் பட்டப் பெயர்களை சொல்லித் தான் மாணவர்களை அழைக்க வேண்டும்
• இவை மட்டுமல்ல இன்னும் இருக்கிறது..
இப்படி ஒரு குட்டி அரசாங்கமே அங்கு நடக்கும். சீனியர்ஸின் சட்டங்கள் ஜூனியர்ஸால் மீறப்படுகின்ற போது அங்கே அடி, உதை, ஏச்சு நடக்கும். அதுவும் சாதாரண அடியல்ல. சாதாரண உதையல்ல. சாதாரண ஏச்சு அல்ல. பொலிஸ்காரன் தோற்றுப் போய் விடுவான். அந்தளவுக்குக் கொடூரம். இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்க யாரும் இல்லை. இதில் பாதிக்கப்படுபவர்கள் முறையிடுவதற்கு ஆளும் இல்லை.
நான் கீழே குறிப்பிடும் அல்குர்ஆன் வசனமும் அல்ஹதீஸும் பகிடிவதை செய்கின்ற முஸ்லிம் சகோதரர்களை விழித்துச் சொல்லப்பட்டது போன்று அமைந்துள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:  “எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூறையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்.”; (33:58)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரது நாவு, கையின் தொல்லையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார்” (புகாரி – 10, முஸ்லிம் – 65)
அல்லாஹுத்தஆலா பகிடிவதையை அவதூறு என்றும் தெளிவான பாவம் என்றும் வர்ணிக்கிறான். அதே போன்று நாவு, கை இவ்விரு உறுப்புக்களாலும் தான் பகிடிவதை அதிகம் நடக்கிறது. எனவே, யார் உண்மையான முஸ்லிம் என்பதனைத் தீர்மானிக்கும் செயலாகவும் பகிடிவதை அமைகிறது.அதாவது யார் பகிடிவதையை மேற்கொள்ளாமல் இருக்கிறாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார் என்ற கருத்தை மேற்படி ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
ஜூனியர்சுடன் அன்பாகப் பேசி பெயர் ஊர்களைக் கேட்டு அறிமுகமாகிக் கொள்வது பகிடிவதை அல்ல. ஏசுவது, அடிப்பது, மனம் நோவிப்பது போன்றவை தான் பகிடிவதை. எனவே, அல்லாஹ் வர்ணிக்கும் இக்கொடிய பாவத்தைத் தவிர்த்து உண்மை முஸ்லிம் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்!
நஸ்ரி ஜிப்ரி ஸலபி
திஹாரிய.

Post a Comment

0 Comments