Subscribe Us

header ads

இந்திய பிரதமர், ஜனாதிபதியுடன் மைத்திரிபால இன்று விசேட சந்திப்பு


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறீசேனா அவரது மனைவி ஜெயந்தியுடன், நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா சென்றார்.

இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, சிறிசேன மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.

டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றடைந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அந்நாட்டு பிரதிநிகளை, மத்திய சாலைப் போக்குவரத்து, கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அரசு சார்பில் வரவேற்றார்.

இந்தியாவுக்கு சென்றுள்ள சிறிசேன, திங்கள்கிழமை இன்று (16) காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று காலை 11.05 மணிக்கு ஹோட்டல் ஐடிசி மெளரியாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவர் சந்திக்கிறார்.

அதையடுத்து, நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெறவுள்ளது. அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மீண்டும் செல்லும் சிறிசேன, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார். அதன் பிறகு, பிரணாப் முகர்ஜி இரவு 8 மணிக்கு அளிக்கும் அரசு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.

Post a Comment

0 Comments