Subscribe Us

இதுவே எனது கடைசி பதிவாக இருக்கலாம்! ஐ.எஸ் வீடியோவில் பிரித்தானிய பிணைக் கைதி


பிரித்தானியாவைச் சேர்ந்த பிணைக் கைதி ஒருவரின் புதிய வீடியோ ஒன்றை ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த பிணைக்கைதியை வைத்து வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், இந்த முறை கொலை மிரட்டல் விடுப்பதற்கு பதிலாக அந்த பிணைக் கைதி மூலம் தங்கள் அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜான் கேன்ட்லி கடந்த 2012-ம் ஆண்டில் சிரியாவின் அலெப்போ நகரில் செய்தி சேகரித்தபோது ஐ.எஸ். அமைப்பினர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

அவரை வைத்து தற்போது வெளியிட்டுள்ள 12 நிமிட வீடியோவில், ஜான் கேன்ட்லி ஐ.எஸ். அமைப்பினர்களுக்கு ஆதரவாக அப்பகுதி செய்திகளை விவரிக்கிறார். ஷரியத் சட்டங்கள் குறித்தும் அமைப்பினர்களின் வீரம் குறித்தும் இடைவிடாது விவரித்துள்ளார்.

கோபெனி, மோசூல் நகரங்களில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் குறித்தும் ஐ.எஸ். அமைப்பினர் களின் வீரதீரம் குறித்தும் ஜான் கேன்ட்லி  விளக்கியுள்ளார்.

மேலும், ஒரு பள்ளியின் முன் நின்று, இந்தப் பள்ளியில் இருந்துதான் அடுத்த தலைமுறை ஜிகாதிகள் உருவாகிறார்கள் என்று கூறியுள்ளார்.

பின்னர் வீடியோவில் காட்டப்படும் ஆளில்லா உளவு விமானம் குறித்து ஜான் கூறுகையில், எத்தனை கண்கள் கண்காணித்தாலும், கொத்து கொத்தாக குண்டுகளை வீசினாலும் ஐ.எஸ். அமைப்பினர்களை யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார்

ஜான் கேன்ட்லி கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்ட நிலையில் அவரது வீடியோவை அமைப்பினர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இதுபோல் பல்வேறு வீடியோக்களில் இதற்கு முன்பு ஜான் கேன்ட்லி தோன்றியுள்ள நிலையில் இதில் இறுதியில் அவர் பேசுகையில், இது எனது கடைசி பதிவு என்று தெரிவித்துள்ளதால் அவரது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.


Post a Comment

0 Comments