Subscribe Us

header ads

சாஹிராவும் பாத்திமாவும் விஞ்ஞானக் கல்லூரியை வீழ்த்திவிடுமோ - ஒரு சமூக ஆரவலனின் அங்கலாய்ப்பு



ஓர் அறிஞர் பாதை வழியே செல்லும்போது சிலர் கட்டுமான வேலையொன்றில் ஈடுபட்டிருப்பதை காணுகிறார். அப்போது அவர்களிடம், “என்ன கட்டுகிறீர்கள்?” என வினவுகின்றார். “சிறைச்சாலை” என்று பதில் கிடைக்கிறது. உடனே அந்த அறிஞசர், “சிறைச்சாலை நிர்மாணிப்பதை விடுத்து கல்விக் கூடங்களை உருவாக்குங்கள். அப்போது சிறைச்சாலைக்கான தேவை இல்லாது போகும்” என்று அறிவுரை கூறுகிறார். இது கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு சம்பவம்.

இன்று புத்தளத்தில் ஒரு கல்லூரியை மட்டம் தட்டும் 'காய் நகர்த்தல்கள்' திரை மறைவில் மிகவும் கட்சிதமாக நடைபெற்று வருகின்றது. இதன் விளைவாக 'மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி' எனும் நிலை இக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாரிய உளவியல் தாக்கத்திற்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர். ஆம், புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியை பற்றி சொல்ல வருகிறேன்.

'பாயிஸ்' ஆரம்பித்ததை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரசியல் ரீதியான முயற்சிகளும், இதை இல்லாமல் செய்துவிட்டுத் தமது பிரத்தியேகக் கல்வி நிலையங்களை கொழுக்கச் செய்யவேண்டும் என்று பொருளார ரீதியாய் இன்னுமொரு குழுவினரும் முயலும் நேரம், நாம் என்ன செய்வது என்ற இரண்டும் கெட்டான் நிலையில் விஞ்ஞான கல்லூரி மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் அங்கலாய்க்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

இதே நேரம், 1000 பாடசாலைத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட சாஹிரா தே.க., பாத்திமா மு.பெ. கல்லூரிகளில் விஞ்ஞானப் பிரிவை மீள ஆரம்பிக்க வேண்டிய சட்ட ரீதியான தேவைப்பாடு உள்ளதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இப் பாடசாலைகளில் விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டால் தானாகவே விஞ்ஞான கல்லூரி பலமிழந்துவிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

2009-ம் ஆண்டு காலப் பகுதியில் உயர் கல்வி அமைச்சராய் பதவி வகித்த 'மயோன் முஸ்தபா' தனது அமைச்சு மூலம் உருப்படியான சேவையொன்றை செய்ய முடியவில்லை என்று தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த நேரம், புத்தளத்திற்கு ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி என்ற தனது கற்பனைக்கு 'பாயிஸ்' செயல்வடிவம் கொடுத்தார். அவருடைய அரசியல் செயற்பாடுகள் அனைத்திலும் நான் உடன்பாடு கொள்ளாதபோதும், இலங்கையில் இல்லாத ஒரு விடயத்தை ‘ஒரு புத்தளத்தான், புத்தளத்திற்காக செய்தபோது’ நானும் ஒரு புத்தளத்தான் என்ற வகையில் சந்தோஷப்பட்டேன். இவ்வாறு ஒரு கல்லூரியின் தோற்றம் எந்தளவு சந்தோசத்தை எனக்கு தந்ததோ, அதை விடவும் அதிகமான கவலையை இன்று என்னுள் விதைத்துள்ளது.

இக் கல்லூரி திறந்த போது நான் சந்தோஷப்பட்டமைக்கான பிரதான காரணியையும் தொட்டு காட்டுகிறேன். நமது பெண்களை நாம் எப்படித் தான் முக்காடு போட்டு மூடி இஸ்லாமிய அடிப்படையில் வெளியில் அழைத்துச் சென்றாலும், ஒரு சந்தர்ப்பத்தில், நாம் வெறுத்தபோதிலும், அவர்களின் அந்தரங்க உறுப்புக்களை பிற ஆண் மகப்பேற்று வைத்தியரிடம் காட்ட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றோம். இப்படி ஒரு அவல நிலை நமது சமூகத்தில் காலம் காலமாய் புரையோடிப்போன ஒன்றாகும். 'மிம்பர்' மேடைகளில் பேசப்பட்ட, ஊடகங்களில் கருத்தாடப்பட்ட விடயமாகும். இந்த அவலத்தை கொஞ்சமேனும் விஞ்ஞான கல்லூரி நிவர்த்திக்கும் என்று இதன் ஆரம்ப செய்தி கேட்டபோது நான் நம்பினேன். எனது நம்பிக்கையும் சந்தோசமும் கடந்த சில வருடங்களாக வீண் போகவில்லை. எமது சகோதரிகளில் சிலர் மருத்துவத் துறைக்குப் பிரவேசித்துள்ளனர். இதுவே எனக்கு கிடைத்த சந்தோசமாகும். பலருக்கும் இது மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்றும் நம்புகிறேன்.

இந் நேரத்தில் இக் கல்லூரியை மூடினாலோ அல்லது மட்டம்தட்டினாலோ பல்கலைக் கழகம் செல்வோரின் தொகையில் கணிசமான வீழ்ச்சி ஏற்படாதா? எனும் ஒரு விடயத்தையும் சிந்திக்க வேண்டியுள்ளது. புத்தளம் சாகிராவிலும், பாத்திமாவிலும் விஞ்ஞான பிரிவை உள்வாங்கினாலும் அது பத்தோடு பதினொன்றாகிப் போய்விடுமா? பழைய சாதனையை நிலை நாட்டுமா? எமது தனித்துவம் பேணப்படுமா? இதற்கு தீர்வு யாது?

அரசியல்வாதிகள் தமது கட்சி நலன்களுக்கு அப்பாலும், பணக்காரர்கள் தங்களின் பொருளாதார திட்டமிடலுக்கு அப்பாலும் ஒன்றுபட்டு, ஊரிலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள், இஸ்லாமிய இயக்கங்கள் ஆகியவற்றை இணைத்துக்கொண்டு இக் கல்லூரியின் தற்போதைய மாணவர்கள், இக் கல்லூரியிலிருந்து தெரிவான பட்டதாரி மாணவர்களுடன் இவர்களின் பெற்றோர்களின் கருத்துக்களையும் பெற்று செயல்படுவது இன்றைய காலத்தின் கட்டாயம் என்று தோன்றுகிறது.

நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையோடும், பிரார்த்தனைகளோடும் விடைபெறுகிறேன்.

உங்களில் ஒருவன் - எம்.ஐ.எம். இன்பாஸ்

நன்றி-TPT-

Post a Comment

0 Comments