மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையே சாரும் என்று உரைப்போர் உளர். எனினும் மைத்திரி ஜனாதிபதியாக வருவதில் ரணில் விக்கிரமசிங்க கொண்டிருந்த வகிபாகம் மிகவும் காத்திரமானது.
மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் போட்டியிட்டிருக்க முடியும். தேர்தல் முடிவு ரணிலுக்கு சாதகமாக அமையாது என்ற கருத்து இருக்குமாயின்,சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய போன்றவர்களில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் கெளரவத்தைக் காப்பாற்றி இருக்கலாம்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க இதை எல்லாம் தியாகம் செய்து மைத்திரிக்கு இடம் கொடுத்தார். ரணிலின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக் கொண்டது. இதுதவிர, மேற்குலக நாடுகளுடன் ரணில் கொண்டுள்ள உறவு காத்திரமானது.
மேற்குலகத்துடன் ரணில் கொண்டுள்ள நெருக்கமான தொடர்பும் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் பெரும் பங்களிப்புச் செய்தது. எனினும் மைத்திரியை ஜனாதிபதி ஆக்குவதில் பின்புலமாக இருந்த ரணில் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
ரணிலின் இராஜதந்திரம் வெளியில் தெரியாத தாழமுக்கம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ரணில் விக்கிரமசிங்கவை புரிந்து கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தவறிழைத்து விட்டார். ரணிலை ஒரு சாது என்று மகிந்த நினைத்ததுதான் மகிந்தவின் தோல்விக்கு முதற் காரணம். மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது ரணிலை அடிக்கடி அலரிமாளிகைக்கு அழைப்பார். மகிந்தவின் அழைப்பை ரணில் ஒருபோதும் நிராகரித்ததில்லை.
மகிந்தவின் ஒவ்வொரு அழைப்பின் போதும் அலரிமாளிகைக்குச் சென்ற ரணில், மகிந்தவின் பலம்
எது? பலவீனம் எது? என்பதை நன்றாகக் கற்றுக் கொண்டார்.
எனினும் இதனைப் புரிந்து கொள்ளாத மகிந்த, ஒரு கோப்பை தேநீருடன் ரணிலைத் தன்னால் மடக்க முடியும் என்று நம்பியிருந்தார்.
ஆனால், ரணில் சாதுவாக இருந்தாலும் அவர் ஒரு சீற்றம் கொள்ளாத சிங்கநரி என்பதை எவரும் புரிந்து கொள்ளவில்லை. ரணில் ஒரு சிங்கநரி என்று கூறும்போது, அதன்பொருள் கொள்வதில் இடர்பாடு ஏற்படலாம்.
சிங்கங்களிலும் நரிகள் உண்டு. நரிகளிலும் சிங்கங்கள் உள்ளன என்பதன் அடிப்படையில் எது பொருந்துமோ அதனை நீங்கள் துணிந்து கொள்ளலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ரணில் விக்கிரமசிங்கவுடனான தொடர்பாடலில் தமிழ் அரசியல் தலைமைகள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஏனெனில் ஜனவரி 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிந்த மறுநாள் வைகறைப் பொழுதில் ரணில், மகிந்த இருக்கும் அலரி மாளிகைக்குச் சென்றார்.
பதவியை விட்டுக் கொடுக்குமாறும் ஆபத்து ஏற்படாமல் தான் பாதுகாப்பதாகவும் மகிந்தவுக்கு உறுதி வழங்கினார். ரணில் மீது கொண்ட நம்பிக்கையால் மகிந்த அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார்.
அட! இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் யாரேனும் கேட்டால், ரணிலை மகிந்த நம்பியிராவிட்டால்; அலரி மாளிகைக்கு ரணில் வருவதற்கு முன்னதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை அவரின் வீட்டுக்கு ஓடுமாறு மகிந்த கூறியிருப்பாரல்லவா?
இதுதான் சொல்கிறோம் ரணிலுடன் தமிழ் அரசியல் தலைமைகள் மிக அவதானத்துடன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நிலைமை கவலைக்கிடமாகும்.


0 Comments