தீபாவளியை முன்னிட்டு
சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது
ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக
வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது
நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை
முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவரான
சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை
அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து,
அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும்
ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப அவர்களுக்கு மேற்கண்ட வாய்ப்பு
வழங்கப்பட்டதில் 500 பேர் புதிய பியட் புன்டோ கார்களையும், 570 பேர்
நகைகளையும், 207 பேர் அடுக்குமாடி குடியிருப்புகளையும் தேர்வு செய்தனர்.
அப்போது பேசிய தொலாக்கியா, தனது கனவுகள் அனைத்தையும் ஊழியர்களே
நனவாக்கியதாகவும், கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட
இலக்கை அவர்கள் எட்டியதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இந்த வருடம்
மட்டும் அக்கம்பெனி ஊழியர்களுக்கு 50 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக
வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: மாலை மலர்
0 Comments