
இஸ்ரேலுடனான தூதரக தொடர்புகளை துண்டித்தால், இலங்கை முப்படையினர் பெரும்
சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்ற கருத்துக்களை மக்கள் மத்தியில்
பரப்புமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கு அமைய பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக அந்த
நாட்டுடனான தூதரக தொடர்புகளை துண்டிக்குமாறு மக்கள் அமைப்புகள்
அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நீண்டகால இலங்கை - பாலஸ்தீன நட்புறவு சங்கத்தின்
தலைவராக இருந்து வந்ததுடன் பாலஸ்தீன விடுதலை போராட்டத்தை ஆதரித்து குரல்
கொடுத்து வந்தார்.
இந்தநிலையில், இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் காரணமாக
அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதேவேளை இஸ்ரேலுடனான தூதரக தொடர்புகளை துண்டிக்குமாறு ஜெனிவாவுக்கான
முன்னாள் தூதுவர்கள் இருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இஸ்ரேலுடன்
தொடர்புகளை துண்டித்தால், கிபீர் தாக்குதல் விமானங்கள், டோரா படகுகளுக்கான
உதிரிப்பாகங்களை பெற முடியாது போகும் என பாதுகாப்பு தரப்பின் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் தயாரிப்பான டோரா படகுகளே விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில், இஸ்ரேலுடன் தொடர்ந்தும் தூதரக உறவுகளை பேணிக்கொண்டு,
மக்கள் மத்தியில் பாலஸ்தீன நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் இரட்டை
வேடத்தில் நடிக்கும் நிலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.
0 Comments