அளுத்கமயில் நடைபெற்ற
கூட்டத்தில் தான் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுப்
பிரிவினர் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக பொதுபலசேனா அமைப்பின்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அளுத்கமயில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பொதுபல சேனா
அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆற்றிய உரையை அடுத்து
அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில்
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கு
சொந்தமான வீடுகள் கடைகள் எரித்து நாசம் விளைவிக்கப்பட்டதாக பல்வேறு
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இச்சம்பவங்களை அடுத்து வன்முறையைத் தூண்டும் வகையில் அளுத்கம கூட்டத்தில்
உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது
செய்யும்படி முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்கள் அரசாங்கத்தை
வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், அளுத்கமயில் நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையை தூண்டும்
வகையில் மட்டுமன்றி, ஜனாதிபதியின் குடும்பத்தாரையும் கேவலப்படுத்தும்
வகையில் ஞானசார தேரர் உரையாற்றியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிருப்தி
தெரிவித்ததுடன், ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதி
பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இதற்கு
பதிலளித்த பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனாநாயக்க அளுத்கம சம்வபம்
தொடர்பாகவும் அங்கு கூட்டத்தில் ஞானசார தேரர் ஆற்றிய உரை தொடர்பாக
புலனாய்வுப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, புலனாய்வுப் பிரிவினர் உங்களிடம் விசாரணைகளை நடத்தினார்களா என
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் தொடர்பு
கொண்டு கேட்ட போது புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் வாக்குமூலம் பதிவு
செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.


0 Comments