சிறுபான்மை இனத்தவர் மீதான அடக்கு முறைகள் சர்வதேச விசாரணைகளை
வலுப்படுத்திவிட்டது. அரசாங்கமே அனைத்திற்கும் பொறுப்புக்
கூறவேண்டும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.
இது தொடர்பில் ஜே.வி.பி. யின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத்
தெரிவிக்கையில்,நாட்டில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இன
முரண்பாடுகளுக்கும் முஸ்லிம் இனத்தவர் மீதான அடக்குமுறைகளுக்கும்
அரசாங்கமே காரணம். அரசாங்க இனவாதிகளின் ஆதரவுடனேயே சிறுபான்மை
மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அளுத்கம இன முரண்பாட்டு சம்பவத்தை அரசாங்கம் ஆரம்பத்திலேயே தடுத்து
நிறுத்தியிருக்க வேண்டும். கலவரம் ஏற்படாது தடுத்திருக்க
முடிந்தும் இனவாதிகளே பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் முஸ்லிம்கள்
மீதான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இன்று சர்வதேசத்தின் மத்தியில்
நாம் அவமானப்பட்டு நிற்கின்றோம். இலங்கை தீவிரவாத நாடு,
அமைதியில்லாத இனப்பிரச்சினைகளுடைய நாடு என சர்வதேசம் முத்திரை
பதித்து விட்டது.
நாட்டில் இனவாத அமைப்புக்களையும் இனவாதிகளையும் பாதுகாத்து
அவர்களை சிறுபான்மை இனத்தவருக்கு அச்சுறுத்தலாக்கி நாட்டில்
குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். மக்களே இதற்கான தீர்வினை
பெற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு சில இனவாதிகளின் கருத்துக்களை நம்பி
இரு இன மக்களும் மோதிக் கொள்ளாது சிங்கள முஸ்லிம் மக்கள்
புரிந்துணர்வுடன் செயற்பட்டால் நாட்டில் பிரச்சினைகளை தீர்த்துக்
கொள்ள முடியும்.
இன்று முஸ்லிம்களுக்கு எதிராகவே அடக்குமுறைகள் கையாளப்படுகின்ற
நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு
அமைச்சுப் பதவியினை தக்கவைத்துக் கொள்வதற்காக அமைதி காக்கின்றனர்.
தம் இனத்தின் மீதான அடக்குமுறைகளை இவர்கள் வேடிக்கை பார்ப்பது
வெட்கப்பட வேண்டிய செயல். இவர்கள் தமது மக்களுக்காக செயற்பட எந்தத்
தகுதியும் இல்லாதவர்கள்.
அதேபோல் நாட்டில் தற்போது இடம்பெறும் சிறுபான்மை மக்கள் மீதான அடக்கு
முறைகள் சர்வதேசத்திற்கு நல்லதொரு ஆதாரமாக அமைந்து
கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு ஏற்பட்டதாக
சர்வதேசம் குற்றம் சுமத்தி சர்வதேச விசாரணையினை மேற்கொள்ளவுள்ள
நிலையில் நாட்டில் முஸ்லிம்களும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றமை
சர்வதேச விசாரணையினை வலுப்படுத்தும் செயற்பாடாகவே
அமைந்துள்ளது. எனவே அரசாங்கமே இவை அனைத்திற்கும் பொறுப்புக்
கூறவேண்டும். அரசாங்கத்தின் மீதும் இராணுவத்தின் மீதும்
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உண்மையென நிரூபிக்கும்
செயலை அரசு செய்கின்றமை எதிர்காலத்தில் மிகப் பெரிய சிக்கலை
ஏற்படுத்தி விடும்.
மேலும், மக்கள் விடுதலை முன்னணி இந்த அடக்குமுறைகளை கண்டித்து கடந்த
தினங்களில் பல கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. நாம் நேரடியாக
இப்பிரச்சினைகளில் தலையிட முடியாது. நாட்டின் பாதுகாப்பு விடயத்தில்
அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
எனினும் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஆயுதம் ஏந்த வேண்டாம். அமைதியைப்
பேணி ஒற்றுமையினை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்
எனவும் அவர் தெரிவித்தார்.

0 Comments