Subscribe Us

கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?

கேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா? கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா?

பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால் நீங்கள் கேட்காத இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்ல வைத்து விட்டீர்கள்! நீங்கள் இப்படிக் கேள்வி கேட்பதே ஏதோ தவறான செயல் என்று கருதுவதால் தான், உங்கள் ஊரையும் முகவரியையும் எழுதாமல் விட்டுள்ளீர்கள் என தோன்றுகிறது. மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன வெட்கம்? நபித்தோழர்கள் இவ்வாறு இருந்திருந்தால் பல சட்டங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் மார்க்கம் மிகவும் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. நீங்கள் தான் கேட்டுத் தெரிந்து கோள்ள வேண்டும்.

பார்ப்பதற்கு எவ்வித தடையுமில்லை. ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:- "உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்(போன்று) ஆவார்கள். நீங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்" (அல்குர்ஆன் 2:223) மாதவிடாய்க் காலத்தில் உறவு கொள்வதையும், பின் துவாரத்தில் உறவு கொள்வதையும் தவிர மற்ற எதனையும் இஸ்லாம் தடுக்கவில்லை. இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியுள்ள இஸ்லாம் இதைத் தடுக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் 'அதா'வு என்பவர் இதுபற்றி நேரடியாக கேட்ட போது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை மேற்கொள் காட்டி ஹாபிழ் இப்னு ஹஜர் இஸ்கலானி இமாம் அவர்கள் "ஆண் தன் மனைவியின் மர்மஸ்தலங்களையும் பெண் தன் கணவனின் மர்மஸ்தலங்களையும் பார்க்கலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும் என்று குறிப்பிடுகிறார்கள். (ஃபத்ஹுல் பாரி, பாகம்-1, பக்கம்-290)

இவ்வாறு பார்ப்பதால் குருட்டுத் தன்மை ஏற்படும் என்றும், ஊமைத் தன்மை ஏற்படும் என்றும் ஹதீஸ்கள் என்ற பெயரால் கூறப்படுபவை இட்டுக்கட்டப்பட்டவைகளாகும். இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) என்ற நூலில் இந்த ஹதீஸை எழுதி, இட்டுக்கட்டப்பட்டவை என்று அடையாளம் காட்டுகிறார்கள்.

நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா?

ஆதமுடைய மக்களே! நிச்சயமாக நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பக்தி) என்னும் ஆடையே அதைவிட மேலானது. (அல்குர்ஆன் 7:26)

இவ்வசனத்தில் ஆடையின் உபயோகத்தை அல்லாஹ் அழகாக விளக்குகிறான். மானத்தை மறைக்கவும், அலங்காரமாகவும் ஆடையை தந்ததாக அல்லாஹ் அறிவிக்கிறான். நாம் அணியும் ஆடை முதன் முதலாக நமது மானத்தை மறைக்க வேண்டும் என்பதை அறிகிறோம். இவ்வசனத்தின் முடிவில் தக்வா (இறைபக்தி) என்னும் ஆடையைப் பற்றியும் குறிப்பிடுகிறான். இதனை கீழ்வரும் வசனத்தில் காண்க.

அவர் (மனைவியர்)கள் (மாதவிடாயிலிருந்) தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்தபின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)

இவ்வசனப்படி அல்லாஹ் எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலம் கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி செயல்படுவதுதான் தக்வா (இறைபக்தி) ஆகும் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதுவே சிறந்த ஆடையெனவும் விளம்புகிறான். எனவே ஆடையின் உபயோகத்தை விளக்கிய அல்லாஹ் மேலும் தாம்பத்திய உடலுறவைப் பற்றி விளக்குவதையும் பார்ப்போம். அதன்படி செயல்படுவோமாக!

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாகும். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:223)

இவ்வசனத்தில் மனைவியரை விளை நிலத்திற்கு ஒப்பிடுகிறான் அல்லாஹ். அவ்விளை நிலங்களுக்கு உங்கள் விருப்பப்படி செல்லவும் அனுமதியளிக்கிறான். நமது விருப்பப்படி செய்வதை அனுமதித்த அல்லாஹ்வும், அவனது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதற்கும் ஒரு சில வரைமுறைகளை வகுத்திருப்பதை குர்ஆன், ஹதீஸ்களில் காணுகிறோம். மாதவிடாயின்போது உடலுறவு தடுக்கப்பட்டுள்ளது. உடலுறவை எந்த முறையில் செய்தாலும், செய்ய வேண்டிய இடத்தில் தான் செய்யவேண்டும். பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது போன்ற வரையறைகளைக் காணுகிறோம். இதனைத் தவிர அவர்கள் உடைகளின்றி நிர்வாணமாக இருப்பதை தடுத்துள்ளதற்கான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை மாறாக,

''அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.'' (அல்குர்ஆன் 2:187)

ஆடையின் உபயோகத்தை அல்லாஹ் 7:26 வசனத்தில் விளக்கியுள்ளான். இவ்வசனத்தில் கணவன், மனைவிக்கு ஆடையாகவும், மனைவி, கணவனுக்கு ஆடையாகவும் உடலுறவின் போது இருப்பதாக கூறுகிறான். அதாவது ஒருவருக்கொருவர் தங்களது மானத்தை காக்கவும், அலங்காரமாகவும் ஆடையாக உள்ளனர் என்பது தெளிவு. எவரது பார்வையுமின்றி தனித்து நடைபெறும் உடலுறவில் கணவன், மனைவி எங்ஙனமிருக்க வேண்டுமென்பதை இவ்வசனம் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குவதைப் பாருங்கள். அங்கு புற உடைகளை விட ஒருவருக்கொருவர் ஆடையாக இருப்பதையே விளக்குகிறான். இதை இன்னும் தெளிவாக்குவதைப் பாரீர்.

மேலும் அவர்கள் தங்களுடைய மர்ம ஸ்தானங்களை (புகுஜனம்) காத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் மனைவிகளிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – இவர்களிடம் உறவு கொள்வது கொண்டு நிச்சயமாக பழிக்கப்படமாட்டார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக எவர் நாடுகிறாரே. அத்தகையவர் வரம்பு மீறியவர்களாவார்கள். (அல்குர்ஆன் 23:5-7, 70:29-31)

உமது மர்ம உறுப்புகளை உன் மனைவியிடமும், உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் பாதுகாத்துக் கொள்வீராக! என்ற நபிமொழியும் இதனை வலுப்படுத்துகின்றது. (ஃபஹ்ஸ் இப்னு ஹகீம் ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத், திர்மிதி)

மேலே கண்ட குர்ஆன், ஹதீஸ் வசனங்களில் "மர்ம உறுப்புக்கள்" என குறிப்பிட்டுச் சொல்லப்பட்டதிலிருந்து கணவன் மனைவிகளுக்கிடையில் அவரவர் மர்ம உறுப்புகள் பார்வையில் பரிச்சயமாவது தவறில்லை என்பது உணரலாம். நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆடையாக அமையலாம் என்பதையும் அறியலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

கேள்வி : குளிர்காலத்தில் இரவில் ஸ்கலிதமாகி விடுகிறது. தண்ணீர் கொண்டு குளித்தால் காய்ச்சல் வரலாம். 4:29 வசனத்தின் படியும்-அம்ருபின் அல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் (அஹ்மது-அபூதாவூது) ஹதீஸ்படி தயமம் செய்து கொண்டால் போதுமா? (குளிர் பிரதேசங்களில் வசிக்கும் எங்களுக்கு இந்த கேள்வி மிக முக்கியமானது. தாமதம் இல்லாமல் பதில் தாருங்கள்).

பதில் : குளிர் பிரதேசத்தில் வாழும் நீங்கள் அதற்கொப்ப வெந்நீரை வைத்துக் கொண்டு குளிப்பது, ஒளூ செய்வது கூடுமே. அந்நிலையிலும் தாங்கள் குளித்தால் தங்களுக்கு உடல் சுகவீனம் ஏற்படும் என்று பயந்தால் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் அடிப்படையில் தயமம் செய்து கொள்வது கூடும். இதனை பொது சட்ட மாக எடுத்துக் கொள்வது கூடாது.

குளிர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலை, குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அரவரவர்களே தக்வா இறையச்சத்துடன் கணித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவின் மீதும் அது சுமக்க முடியாத சுமையை சுமத்துவதில்லை. (அல்குர்ஆன் 2:286)

Post a Comment

2 Comments

  1. Can KV mention the name of the Alim who is giving religious verdict here please ?

    ReplyDelete
  2. Hi kayal may I knw ur real name ...

    ReplyDelete