இனவாத தாக்குதலுக்குள்ளான இடங்களில் தர்கா
நகர், பேருவளைக்கு அடுத்ததாக வெலிபன்ன காணப்படுகிறது. இங்கு இனவாதம் இரு
அப்பாவி உயிர்களை பலியெடுத்துள்ளதோடு பாரிய சொத்து சேதங்களையும்
உருவாக்கியுள்ளது.
சற்று முன்னர்
நகர்ப்பகுதிக்கு விஜயம் செய்த எமது செய்தியாளர் நகரில் இரண்டு வீடுகள்
சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு சுமார் 20 வர்த்தக நிலையங்கள் தாக்கி
உடைக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் ரோட் என அறியப்படும் இடத்தில் நான்கு
வீடுகள் தாக்குதலுக்குள்ளாகி சேதப்பட்டிருப்பதோடு ஒரு கோழிப்பண்ணையும்
முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் முஸ்லிம் கொலனி பகுதியில் மேலும் ஒரு
வீடும் தாக்குதலுக்குள்ளாகி சேதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது
இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தபோதும் நேற்றிரவு
இனவாதிகளை எதிர்கொண்டு களத்தில் போராட வேண்டிய நிலைக்கு முஸ்லிம் சமூகம்
தள்ளப்பட்டிருந்ததாகவும் அதே போன்று நன்கு திட்டமிட்ட முறையில் எம்மவர்கள்
இனவாதிகளை எதிர்த்து நின்றதாகவும் அறியமுடிகிறது. இதன் போது களத்தில்
நின்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் எதிர்த் தாக்குதலை தாங்க
முடியாது இனவாதிகள் பின் வாங்கியதாகவும் அதன் பின் நகர்ப்பகுதி
இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு சுமுக நிலை திரும்பியதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
இனவாதிகளின் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி கோழிப்பண்ணையில் காவலுக்கிருந்த
தமிழ் மனிதர் ஒருவரும் மேலும் ஒரு சிங்கள மனிதரும் மரணத்தைத்
தழுவிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சாதாரண நடமாட்டம் இடம்பெறுவதாகவும் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை காண வந்து போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments