பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தான்
ராணுவத்தின் நடவடிக்கைகளினால் அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள
அகதிகளுக்கு நிதியுதவி செய்யும் நோக்கத்திற்காக இருபது ஓவர் கிரிக்கெட்
ஒன்றை நடத்தி நிதி திரட்ட பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி ஆலோசனை
செய்து வருகிறார்.
பாகிஸ்தான் – ஆப்கான் எல்லையில் உள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில்
தலிபான் மற்றும் பிற தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
தொடுத்து வருவதால் அங்கிருக்கும் பழங்குடியினர் உட்பட சுமார் 470,000 பேர்
அகதிகளாக மாறியுள்ளனர்.
பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் பிறந்த ஷாகித் அப்ரிடி அகதிகளுக்கு நிதி திரட்டும் முடிவில் திட்டவட்டமாக இறங்கியுள்ளார்.
நான் இதற்காக அதிகாரிகளுடன் பேசி வருகிறேன் லாகூரில் இருபது ஓவர்
கிரிக்கெட் ஒன்றை நடத்தி அவர்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்ட ஆலோசனை
செய்து வருகிறேன் என்றார். கராச்சியில் தாய்மார்களுக்கும் உள்நாட்டு
அகதிகளுக்குமான தன் சொந்த அறக்கட்டளைத் திறப்பு விழாவில் அஃப்ரிடி இவ்வாறு
பேசியுள்ளார்.
நான் என்னுடைய மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன் என்றார் அஃப்ரிடி.
அறக்கட்டளை துவங்கிய எண்ணமும் இளைஞர்களை கல்வி மற்றும் விளையாட்டுப்பக்கம்
திருப்பவே, தீவிரவாதம் என்ற ஒன்றிலிருந்து அவர்களை நல்வழிக்குத்
திருப்பவேண்டும் என்பதற்காகவே என்கிறார் அஃப்ரிடி.
பழங்குடியினர் பகுதிகளில் இளைஞர்களுக்குக் கல்வி இல்லை, ஆகவே யார்
வேண்டுமானாலும் அவர்கள் மனதை மாற்றி தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட எதிர்மறை
வேலைகளுக்குப் பயன்படுத்தி விடுவார்கள். ஆகவே அவர்களுக்குக்
கல்வியூட்டுவது தேசத்திற்குச் செய்யும் கடமையாகும் என்று கூறியுள்ளார்
அஃப்ரிடி.
விளையாட்டு வீரர்கள் பொதுவாக விளையாட்டை வளர்க்கிறேன், பயிற்சி
அளிக்கிறேன் என்று செல்வது வழக்கம். ஆனால் சொந்த நாட்டின் அரசு நிர்கதியாக
நடுத்தெருவில் நிறுத்திய மக்களுக்காக சேவை செய்ய நினைப்பது ஒரு அரிய செயல்.
இந்த விதத்தில் அஃப்ரிடி ஒரு முன்னோடியாகவே திகழ்கிறார்.


0 Comments