தக்காளிப் பழங்களின் பிரகாசமான சிவப்பு
நிறத்திற்கு காரணமான முக்கிய இரசாயனக் கூறானது ஆண்களில் இனவிருத்தி ஆற்றலை
ஊக்குவிப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
லைகோபீன் என்ற மேற்படி இரசாயனப்பொருள் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை
70சதவீதத்தால் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஒஹியோ
மாநிலத்திலுள்ள கிளேவலானட் மீள்விருத்தி மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வருட காலமாக உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட 12 ஆய்வுகளின் பிரகாரம்
மேற்படி லைகோபீன் இரசாயனத்தை தினசரி அதிகளவில் வழங்குவதன் மூலம் ஆண்களின்
இனவிருத்தி ஆற்றலைத் தூண்டி குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க முடியும் என
கண்டறிந்துள்ளதாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மேற்படி நிலையத்தின்
பணிப்பாளர் அசோக் அகர்வால் தெரிவித்தார். 
அத்துடன் லைகோபீன் ஆண்களில் விதைப்பை தொடர்பான நோய்களை குறைப்பதுடன்
விதைப்பை புற்றுநோய் விருத்தியடைவதைத் தடுக்கவும் தணிக்கவும் கூடியதென
ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
தக்காளிப்பழங்களில் பெருமளவிலுள்ள லைகோபீன் கரட், தர்ப்பூசணி மற்றும் பப்பாளி போன்ற சிவப்பு நிறப் பழங்களிலும் காணப்படுகிறது.


0 Comments