இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இருபது-20
ஓவர் உலக கிண்ணத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மிர்பூரில்
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 2ஆவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்
இந்தியாவும், அதிர்ஷ்டம் இல்லாத தென்னாபிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களம் இறங்கிய தென்னாபிரிக்கா அணியில் டீகொக் 6
ஓட்டங்களுக்கும் அம்லா 22 ஓட்டங்களுக்கும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
இதையடுத்து களம் இறங்கிய டூ பிளஸிஸ் அபாரமாக ஆடி 58 ஓட்டங்களை எடுத்து
ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு
172 ஓட்டங்களை குவித்தது. டூமினி ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை குவித்தார்.
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 ஓவர்களுக்கு 22 ஓட்டங்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 173 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் ரகேனாவும் களம்
இறங்கினர். அணியின் ஓட்ட எண்ணிக்கை 39 ஓட்டங்களாக இருந்த போது ரோகித்சர்மா
24 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து 32 ஓட்டங்கள் எடுத்த
நிலையில் ரகானே ஆட்டம் இழந்தார்.
விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் விராட் கோக்லி அதிரடியாக
துடுப்பெடுத்தாடினார். அவருடன் இணைந்து சிறிது நேரம் அதிரடி காட்டிய
யுவராஜ் சிங் 17 பந்துகளில் 18 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. அடுத்து களம் இறங்கிய
சுரேஷ் ரெய்னா தென்னாபிரிக்காவின் பந்து வீச்சுக்களை எளிதாக எதிர்கொண்டார்.
10 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசி 21 ஓட்டங்களுடன்
அரங்கு திரும்பினார்.
19.1 ஓவர்களில் இந்திய அணி 176 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டுகள்
வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது. விராட் கோக்லி அதிகபட்சமாக
ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 72 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு
வித்திட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இறுதி போட்டிக்கு
இந்தியா தகுதி பெற்றது. எதிர்வரும் 6 ஆம் திகதி இறுதி போட்டியில் இலங்கையை
எதிர்கொள்கிறது.
0 Comments