Subscribe Us

header ads

அறிவுப்பசிக்கு கிடைத்தன ஆய்வுக்கூடங்கள்

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – புத்தளம்]

வீதியின் இருமருங்கும் பலவண்ண கலர்களில் கொடிகள் காற்றில் அசைந்தபடி  யாரையோ எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றன. அசையும் சத்தங்கள் கைதட்டல் போல்  இருக்கிறது. புத்தளம் வரலாற்றில் இது பொன்னாள் என்று சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

புத்தளம் நகராதிபதியும், ஆளும் கட்சி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸின்
இன்னுமொரு அதிரடி நடவடிக்கையாக ஆய்வுக்கூடங்கள் மூன்று வரிசைகிரமமாக எமக்கு கிடைத்திருப்பது எமது மண்ணுக்கு கிடைக்கபெற்ற பெருமை. எமது  மாணவர்களின் அறிவுப்பசிக்கு கிடைத்த தீனி.

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வருகையால் புத்தளம்
என்று சொல்வதை விட புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை என்று மில்லாதவாறு  அழகுப்படுத்தப்பட்டு இருந்தது.

சாஹிரா அன்னையிடமிருந்து கல்வி கற்று வெளியேறிய பழைய மாணவர்கள்,  வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் மற்றும்  இன்னோரன்ன துறைகளில் பணிபுரிவோர் என அனைவரும் தனது அன்னைக்காக  ஒன்று கூடியிருந்ததை எண்ணி பார்க்கையில் ஆனந்த கண்ணீர் கண்களில்  வட்டமிடுகின்றது.

சாஹிராவின் நான்கு நுழைவாயிலும் புதுத்தோற்றத்தோடு மின்னுகிறது. பிரதான  நுழைவாயில் சாஹிராவின் நினைவு சின்னத்துடன் தெம்புடன் நிற்கிறது. இதற்காக  அல்லும் பகலும் பாராது இதன் சித்திர ஆசிரியர்கள் அதனோடு மாணவர்கள் என முழுவீச்சாய் பாடுப்பட்டிருந்தனர்.

இன்னுமொன்றையும் நாங்கள் மறந்து விடலாகாது. நகர சபை ஊழியர்கள்
தங்களுடைய பல வேலைப்பளுவுக்கு மத்தியிலும் சாஹிராவை அழகு படுத்த
அரும்பாடுபட்டு வேலை செய்தனர். சாஹிராவின் உள்ளக பாதையோரங்களில் புற்கள்  பதிப்பதில் ஆரம்பமாகி அஸ்வர் மண்டபத்தின் முன்னாள் நீர் வழிந்தோடும் அலங்கார  வடிவம் பொறுத்துவது வரை என பலபல வேலைகளை அன்னை சாஹிரா உள்வாங்கி கொண்டது.

சாஹிராவின் முன்மதிற்சுவர்கள்வர்ணபூச்சி கொண்டு வடிவுப்படுத்தியதில்

மக்களின் கண்பார்க்க கை மூக்கைத்தொட்டது. பாழடைந்து கிடந்த அஸ்வர்மண்டபம் புதுப்பொழிவு பெற்றது. இந்த துரித மாற்றத்திற்கு, தமது அன்னையின் வளர்ச்சிக்கு பழையமாணவர் அணிகள்  தம்மால் இயன்ற பண உதவிகள், மனித உதவிகள் என வழங்கி தமது பங்களிப்பை நல்கி இருந்ததை பாராட்டத்தான் வேண்டும்.

புத்தளம் நகரின் ஒரேயொரு முஸ்லிம் தேசிய பாடசாலை சாஹிரா கல்லூரி இருக்கின்ற  நிலையில் இவ் அபிவிருத்திகள் போதுமானதாக இருக்காது இல்லையா..! கடந்த 12-02-2014  தனது அறுபத்தொன்பதாவது பிறந்த நாளை கொண்டாடிய சாஹிரா இன்னும் முழுமையாக தேசிய  பாடசாலைக்கு உள்ள தோற்றம் வரவில்லை என்பதே நாமறிந்த நிலைமை.

நேற்று முளைத்த சிறு சிறு பாடசாலைகள் எல்லாம் துரித அபிவிருத்தியை தாண்டி சென்று கொண்டிருக்கும் போது நாம் இருந்த இடத்திலிருந்தபடியே நீச்சல் அடித்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.

எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்து இருக்க முடியாது. எமது அன்னைக்கு, கல்வி போதித்து தந்த எம்மாதாக்கு நாம் செய்யாமல் வேறு யார் செய்திட முடியும்.

எம்மை தனி மனித அந்தஸ்து என்பவற்றுக்கு அப்பால் சமூகத்தில் உயர் அந்தஸ்தை  பெற்று தந்த, எமக்கு ஒரு முகவரியை தேடித்தந்த நம் அன்னைக்கு என்னத்தான் கைமாறு பண்ண போகிறோம்.

எமக்கு கிடைக்கபெற்றுள்ள இந்த ஆய்வுக்கூடங்கள் மிகப்பெறுமதியானவை. இவைகளை  நாம் பாதுகாக்கும் அதேவேளை இதன் பூரண பயன்களையும் பெற்று கொள்ள திடசங்கற்பம் கொள்ள வேண்டும். இதன் ஊடாக எமது சமூகத்திற்கு, எமது ஊரிற்கு நன்மை பயக்கும் விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எது எப்படியோ தனது பாடசாலைக்காக இணையும் உள்ளங்கள் தொடர்ந்தும்
துணையாக இருக்க வேண்டும். கல்வி கற்று வெளியேறிய எல்லோரும் துணையாக  இருந்து சாஹிராவின் வளர்ச்சிக்கு கை கொடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments