Subscribe Us

மஹிந்தவின் ஆட்சி தொடருமானால் மக்களின் துன்பம் நீடித்து செல்லும் -ஐ.தே.க.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி தொடர்ந்து இருக்குமேயானால் இந்நாட்டு மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும் தெரணியகல தொகுதி ஐ.தே.க. அமைப்பாளருமான ரன்ஜித் பொல்கம்பல தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்,
 
இந்த அரசு கேலிக்கூத்து நிகழ்ச்சிக்கு இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து அதன் சுமையை மக்களின் தலையில் கட்டிவிடுகின்றது. இந்நாட்டிற்கு எந்தவொரு முதலீட்டாளர்களும் வருவதில்லை. மாறாக பெற்ற கடனை மக்களை அடகு வைத்து கூடுதல் வட்டிக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெற்று வருகின்றது.
 
அதிவேக பாதை அமைப்பதாக கூறி 30 சதவீதமான நிதியை கொள்ளையடித்துக் கொள்கின்றனர். மேலும் வரலாறு காணாத வகையில் நாட்டின் நாலா பக்கமும் பாலியல் துஷ்பிரயோகமும் கொள்ளைச்சம்பவங்களும் வணக்கஸ்தலங்கள் நொருக்கப்படுவதென பல குற்றச்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதனால் இவற்றை பார்க்கும் போது இன்று இந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தாததையே புலப்படுத்துகிறது.
 
இந்த அரசின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் நாம் அனைவரும் இணைந்து புரட்சி போராட்டத்தில் களமிறங்க வேண்டும். மேலும் ஐ.தே.கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பொய்ப்பிரசாரம் செய்து நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளப் பார்க்கிறது. இதற்கு எமது கட்சி ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

Post a Comment

0 Comments