மில்டன் கொதித்துப்போனார். அன்பு செய்ய வேண்டிய மதபீடங்கள்
வன்முறையை தூண்டிவிடுவதை கண்டித்து கவிதைகள் எழுதினார். அவரை நாத்திகவாதி
என்று வசைபாடினார்கள். சொர்க்க நீக்கம் என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள்
இழைத்து, இழைத்து உருவாக்கினார். அன்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான்
நாயகனாக நிமிர்ந்து நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும்.
அவனின் நியாயங்களை அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி
செய்த சாத்தான் உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான்.
இதன் மூலம் மக்களை கடவுள் போல கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி
தூண்டினார் மில்டன். அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம்
பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நூல் நின்றது. நூல்களை தணிக்கை
செய்தபின்னரே வெளியிடுவோம் என்று அரசு சொன்னது. அதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில் தன்னுடைய எரோபேஜிடிகா நூலை அவர் துண்டு பிரசுரமாக
வெளியிட்டார். மில்டனின் இந்த செயல்கள் அவரின் முதல் மணவாழ்வை பாதித்தது.
இவரைவிட்டு அவரின் மனைவி நீங்கினார். இவரோ கண்டுகொள்ளவே இல்லை. மூன்று
வருடங்கள் கழித்து திரும்பி வந்த அவர் மரணமடைந்தார். அடுத்த திருமணம்
நிகழ்ந்தது. அந்த மனைவியும் சீக்கிரம் இறந்து போனார்.
கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது மில்டனுக்கு. அடுத்த திருமணத்தை வயதான
காலத்தில் இவர் செய்து கொண்டது இவரின் மகள்களை கடுப்பேற்றியது. வெறுப்பை
கொட்டினார்கள்.
"பருவங்கள் வருடத்தோடு வந்து போகின்றன ; எனக்கோ வசந்தத்தின் மோட்டோ,
கோடையின் ரோஜாவோ வருவதே இல்லை. விலங்கு மந்தைகள்,மங்காத ஒளி ததும்பும்
மனிதர்களின் முகங்கள் எதுவுமே எனக்கு தெரியவில்லையே ! என்னை மேகங்கள்
மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கும் இருட்டு, இருட்டு, இருட்டு
மட்டுமே !" என்று பார்வையை இழந்த மில்டன் எழுதினார். அவரின் புது மனைவி
அன்பை பொழிந்தார்.
இருளில் மூழ்கி போயிருந்த அவர் எப்படி அதைப்பார்த்தார் என்று ஒரு கவிதையில்
இப்படி சொல்கிறார். "வாழ்வின் பாதிப்பொழுது பேரிருளில் போனது எனக்கு என்
வெளிச்சத்தை எப்படி வெளியிட்டேன் நான் ?
என் அறிவை அழிக்க வருகிறது மரணம் பயனற்று,பொலிவிழந்து வளைந்து நிற்கும்
ஆன்மாவோடு "எனக்கான வெளிச்சம் மறுக்கப்பட்டதா இறைவனே ?" என்று கேட்கிறேன்
நான்..
முணுமுணுப்போடு பதில் வருகிறது
"இறைவன் இதை செய்யவில்லை. மனிதனின் செயல்கள் மகத்தானதை தருகின்றன. சிறுசுமையை சுமப்பவர்கள் பேறு பெறுகிறார்கள்.
எவன் நிலத்திலும்,நீரிலும் ஓயாமல் உழைக்கிறானோ, காத்திருந்து,பொறுத்திருந்து போராடுகிறானோ பேருலகே
கொண்டாடும் அவனை !"
"நரகம் சொர்க்கமாவதும்,சொர்க்கம் நரகமாவதும் நன்னெஞ்சின் நளினச்செயலே !"
என்று எழுதினார் மில்டன். வாழ்க்கையை பார்வை போனபின் கொண்டாடினார் மில்டன்.
மீண்ட சொர்க்கம் என்று இறைவனைப்புகழ்ந்து பாடல்கள் எழுதினார். அவரின்
கவிதைகளை உலகமே கொண்டாட ஆரம்பித்தது. மில்டனின் தாக்கம் அவரின் காலங்களை
கடந்தும் சென்றது. அவருக்கு முன்னூறு ஆண்டுகள் கழித்து செவித்திறன்,
பார்வை, பேச்சு என எவையும் இல்லாத நிலையிலும் சாதிக்க முனைந்த ஹெலன்
கெல்லருக்கு மில்டனே வெளிச்சம் ஆனார்.
ஜான் மில்டன் அமைப்பு ஒன்றைத் தொடங்கினார் கெல்லர்.
மில்டனின் காதல் ததும்பும் கவிதை ஒன்று :
அறுபது வருடங்களில் காதலை
கதைத்துவிட முடியாது என கற்றுக்கொண்டேன்
பிரியம் சொல்லும் பெருஞ்சொற்கள் பிரிந்தே ஏமாற்றம் தருகின்றன
எது அது எனும் கேள்விகள் தவிர்த்து
மலர்வனத்தின் ரோஜா நறுமணம் போல பொழிகிறது அது...
நீ போய்விட்டாய்
பெருங்கடலும், கண்டமும் நடுவில்
நின்று நகைக்கின்றன
நாம் இணைந்து பார்த்த எல்லாவற்றில் இருந்து
எதோ சில ஏனோ திரும்பவருகின்றன
வென்ற ஒரு புது படைப்பை பின்னுகிறோம் நாம்
விசித்திரமான, விரகம் தரும் ஒன்று நடக்கிறது
எதிர்த்தும்,வாதிட்டும் வதைந்த
வாழ்க்கையின் சிக்கல்கள் உடைத்து விடுதலை வருகிறது
பெருவாழ்வின் புதுகீதம் பாடுவோம் நாம் :
கடவுள் பின்னும் இழைகளில் பிணைந்த
புத்துலகு பிறந்தது, அதன் பிரிக்க முடியா அங்கம் நாம் ! |
0 Comments