குடும்பம் என்பது சிறு சமுதாயம் என்று வர்ணிக்கப்படுகிறது. அக்குடும்பத்தை
ஆண் தலைமை வகித்து நிர்வகித்து வந்தாலும் ஒரு பெண்ணிடம்தான்
அக்குடும்பத்தின் அடித்தளம் (குழரனெயவழைn) உள்ளது. நிர்வாகத்திலும்
அடித்தளத்திலும் ஆட்டம் கண்டுவிட்டால் குடும்பத்தில் பல வெடிப்புகள்
ஏற்பட்டு விடும்.
முக்கியமாக, இந்த வெடிப்புகள் ஏற்படக் காரணமாக அமைவது பொருளாதாரம்.
பொருளாதாரமே அனைத்து அமைப்புகளினதும் தலையெழுத்தை நிர்ணயிக்கக்
கூடியதாகவுள்ளது. குடும்ப வாழ்வில் உழைப்பு, பொருளாதாரம் சரியாக
அமையாவிட்டால் பல சிக்கல்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்து
பிரிவுக்குக் கூட (கணவன்-மனைவி) வழி வகுத்து விடும்.
ஓர் ஆணின் சம்பாத்தியம் முழுமை பெறாத பட்சத்தில் தொழில் செய்ய முடியாத சில
விபத்துச் சம்பவங்கள் வேலை வாய்ப்பினை இழத்தல் அல்லது தொழில் தேடுதல் என்ற
சாக்குப் போக்குச் சொல்லிக் காலத்தைக் கழித்தல், தொழில் இருந்தும் மனைவி,
பிள்ளைகளைக் கவனிக்காமல் தான்தோன்றித்தனமாக நடத்தல் கணவனை இழந்த நிலை.
மற்றும் இருவரும் சம்பாதித்தால் நன்றான இருக்கும் என்று வீட்டுத் தலைவனே
அனுமதி கொடுக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணானவள் தொழில் செய்யும் நோக்கில்
வீட்டுப்ப படியைத் தாண்டுவதோடு கடல் கடந்து போய் உழைக்கவும் நேரிடுகிறாள்.
இவையெல்லாம் ஐரோப்பிய கைத்தொழில் புரட்சிக்குப் பின்னால் ஏற்பட்ட நவீனமும்
அல்ல.. நாகரிகமும் அல்ல… பொருளாதாரம் அடிமட்டத்தில் சென்றதன் காரணமாகவும்
வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்புவதற்காகவும் பெரும்பாலான பெண்கள்
விரும்பியும் விரும்பாமலும் தொழில் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்த வேண்டிய
கட்டாய சூழ்நிலையே முக்கிய காரணம். தந்தை- சகோதரன்- கணவன் இவர்களின்
தலைமைகள் ஆட்டம் காணும் பட்சத்தில் இந்தப் பெண்ணானவள் (மகள், சகோதரி,மனைவி)
‘ஆணுக்கு நிகராக வேலைக்குச் செல்ல வேண்டி உள்ளது.’ ஆண்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, சுதந்திரம், புரட்சி என்ற நோக்கத்திலும்
மகிழ்ச்சிக்காகவே தொழிலுக்குச் செல்லுகிறோம் என்று எந்தக் குடும்பத்
தலைவியாவது எடுத்துரைப்பாளா?
ஆனால், கற்ற கல்வியை விருத்தி செய்து பிரயோசமாகப் பயன்படுத்தி தொழில்
செய்வோரும் உள்ளனர். வெளி உலகப் பார்வை தன்மேல் பதிய வேண்டும் என்பதற்காகத்
தனி நபராகத் தனித்துவமிக்க பெண்ணாக தொழிலில் கால் பதிப்பவர்களும் உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களை, சுமைகளை ஆண்
சுமந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் பெண்ணானவள் பொறுப்பெடுக்கும்
நிலையேற்படுகிறது. கூன் விழுந்துள்ள குடும்பத்தைச் சரிவர நிமிர்த்தி
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் பல குடும்பத் தலைவிகள்
தொழிலுக்குச் செல்கிறார்கள் என்பதே முற்றிலும் உண்மை. எந்த இல்லத்தரசியாவது
பெற்றோர்களை, கணவனை, பிள்ளைகளை விட்டு, விட்டு மகிழ்ச்சிக்காகத்
தொழிலுக்குச் செல்வாளா?
அடிமட்டத்திலுள்ள பொருளாதாரம், பெற்றோரைப் பராமரிக்கும் அவசியம்- வீட்டுத்
தலைவனின் சம்பாதியத்தில் பூரணமாக மூவேளை உணவு உண்ண முடியாத நிலை.
பிள்ளைகளின் படிப்பு இதர செலவுகள்- திடீர் சுகவீனம்- வேலையில்லாத்
திண்டாட்டம்- சீதனப் பிரச்சினை என ஏகப்பட்ட பிரச்சினைகள் சங்கிலித்
தொடராகக் கழுத்தை நெரிக்கும் போதுதான் பெரும்பாலான பெண்கள் சந்தர்ப்ப
வசத்தால் தொழிலுக்குச் செல்கின்றனர். அவரவர் கல்வித் தராதரத்துக்கு ஏற்ப
தொழில் வாய்ப்புகளைப் பெற்று ஓரளவு மகிழ்ச்சியுடன் குடும்ப வண்டியைச்
செலுத்த முற்படுகின்றனர்.. அதே நேரம் குடும்ப நிர்வாகத்தைப் பெண்ணின்
தலையில் சுமத்திவிட்டுச் சோம்பேறியாக ஓர் ஆண் இருந்து விடக் கூடாது.
கணவனாவன் குடும்பத்தைச் சரியாக நிர்வகிக்கும் அதேவேளை, மனைவியானவள் அந்தக்
குடும்பத்தைத் திட்டமிட்ட வழியில் முன் கொண்டு செல்பவளாகவும் இருக்க
வேண்டும். இவற்றின் மூலமே குடும்பச்சக்கரம் சரியான வழியில் செல்லும்.
முடிந்தளவு குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கணவனே தனித்து நின்று
செயற்படுத்த வேண்டும்.
மேலும், நமக்கு என்றொரு சம்பாத்தியம்-சுதந்திரம்-ஒரு தனித்துவம்
எல்லாவற்றுக்கும் கணவனின் கைகளையே எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
என்ற எண்ணத்துடன் வேலைக்குச் செல்லும் பெண்களும் உள்ளனர். அது அவர்களின்
அழுத்தம் இல்லாத தனிப்பட்ட சுதந்திரமான போக்கு.
தொழில் நிமித்தம் வெளியே செல்லும் போதுதான் பொறுப்புகள் எப்பேர்ப்பட்டது
என்பது புரியும். பெண் என்பவள் வீட்டுப் பொறுப்புகளைச் சுமப்பதோடு
அலுவலகத்தின் சுமைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. விடிந்தது முதல்
தொழிலுக்குச் செல்லும் வரை வீட்டுக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் அல்லது எங்கேயாவது பொறுப்பாக
ஒப்படைக்க வேண்டும். பின்னர் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் சிறிய மேக்
அப் உடன் கடிகாரத்துக்கு இணையாக ஓடவேண்டும். பஸ்ஸின் நெரிசல்கள்,
இடிபாடுகளிடையே சில அசிங்கமான தொந்தரவுகளைச் சகித்துக் கொண்டு நிறுவனத்தை
அடைந்தால் அங்கே பல டென்ஷன்கள,; சுமைகள், அழுத்தங்களை இந்தப் பெண்
தாங்கிக் கொள்ள வேண்டும். மேலதிகாரியின் தேவையில்லாத திட்டுக்களைக் கூட
உள்வாங்கிப் போலியான புன்னகையை வெளியேற்றும் ஒரு பொம்மையாக இவள்
செயற்படுகிறாள்.
பெண் என்றால் எப்படியும் ஒரு மட்டமான பார்வை - இளக்காரமான கருத்து,
ஆண்களின் எண்ண ஓரத்தில் அளவுக்கதிமாகவே உண்டு. அதுவும் தொழில் நிறுவனங்கள்
என்றால் அளவுக்கு அதிகமான அழுத்தங்களுக்குப் பெண் ஆளாகிறாள். அவள் சரிவர
கடமைகளை நிறைவேற்றினாலும் உரிமைகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன. மேலும்
தொழில் புரியும் நிறுவனத்தில் பல பாதகமான சக்திகளுடன் எதிர்த்துப் போராட
வேண்டிய நிலை ஏற்படுகிறது. என்ன முறைகேடான நிர்வாகப் பிரச்சினை என்றாலும்
மேலதிகாரியால் அளவுக்கு அதிகமாக இம்சிக்கப்படுவது இந்தப் பெண்கள்தான்.
அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அத்தியாவசியமற்ற
விடயங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். நியாயமான வெற்றிகரமான உயர்வுக்குப்
போராட வேண்டும்.கடினமான படிகளைத் தாண்ட வேண்டும். இது போன்ற பல காரணிகளால்
இந்தப் பெண்களுக்கு அடிக்கடி தலைவலி, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றன
ஏற்பட வாய்ப்பு உண்டு.
பெண்களின் உடல்வாகு மென்மைத்தன்மையைக் கொண்டது உடல் ரீதியான பல
அசௌகரியங்களுக்கும் ஆட்பட்டவர்கள். அளவுக்கதிமான மனச்சுமைகள்,
சிரமங்கள்,கடினங்கள் பல விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலம், பிள்ளைப்
பேறு காலம், பாலூட்டும் காலம் எனப் பல படிமுறைகள் இவர்களுக்கு உண்டு.
வீட்டுப் பொறுப்புகளையும் சுமந்து அலுவலகத்தின் அழுத்தங்களுக்கு முகம்
கொடுப்பது மட்டுமின்றி பாலியல் ரீதியான தொந்தரவுகள் போன்றவற்றையும்
மரக்கட்டையாக உள்வாங்க வேண்டிய நிலையேற்படுகிறது. உண்மையிலேயே தொழிலுக்குச்
செல்லும் பெண்கள் ஆணுக்குச் சரி நிகரானவள்தானா அல்லது பாவப்பட்ட ஜென்மா?


0 Comments