குழந்தையின்மை என்பது வலி மிகுந்த ஒரு நிலை. அதிலும், ஆசிய நாடுகளைப்
பொறுத்தவரையில், அது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்படுவதால், இந்நாடுகளைச்
சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியர் அனுபவிப்பது இரட்டிப்பு வலி.
குழந்தை
பிறப்பை மகப் பேறு என்கிறோம். காரணம், அது ஒரு வரமாகவே கருதப்படுகிறது.
ஆனால், இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம் இந்த வரத்தைப் பெற்றுத் தரும்
அளவிற்கு முன்னேறியிருக்கிறது. இந்த முன்னேற்றமே செயன்முறைக் கருத்தரிப்பு.
இயற்கையாக, பெண்ணின் உடலின் உள்ளே நடைபெறும் கருக்கூட்டலை வெளியே
எடுத்துச் செய்வதே இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை. இதில், ஒவ்வொருவரின்
உடல் தகுதிகளுக்கேற்ப, அவர்களின் பிரச்சினைகளுக்கேற்ப, ஐ.யு.ஐ.,
ஐ.வி.எஃப்., இக்ஸி, இம்ஸி எனப் பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இதன் மூலம், குழந்தையின்மைக்கான கடுமையான பிரச்சினைகள் உடையவர்களும்,
குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இன்று இருக்கின்றன.
இதுமட்டுமன்றி, கருமுட்டைக் கோளாறுகள் உள்ள பெண்கள் கருமுட்டை தானம்
மூலமும், கருப்பை இல்லாத பெண்களாயின் வாடகைத் தாய் மூலமும், உயிரணு இல்லாத
ஆண்களாயின் உயிரணு தானம் மூலமும் தமக்கென்று ஒரு குழந்தையைப்
பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கைகூடி வந்துள்ளன.
இந்தத் தொழில்நுட்பம் மற்றும் இது குறித்த சந்தேகங்களுக்கு இங்கே
விளக்கம்தருகிறார், தமிழ்நாட்டில், சென்னையில் இயங்கிவரும் பிரஷாந்த்
மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், உலகப் புகழ்பெற்ற செயன்முறைக்
கருத்தரிப்பு நிபுணர்களில் முக்கியமானவரும், இலங்கையர்களுக்கு மிகவும்
பரிச்சயமானவருமான டொக்டர். கீதா ஹரிப்ரியா.


0 Comments